சிபிஐ விசாரணையை சந்திக்கத் தயார்: ஜஸ்வந்த் சிங்

உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் சிபிஐ தாக்கல் செய்த இடைக்கால விசாரணை அறிக்கையில், முந்தைய பாஜக ஆட்சியின்போதும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்துள்ளது. அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், தொலை தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி, மறைந்த பிரமோத் மகாஜன் ஆகியோரது பதவிக் காலங்களில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதனால், ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தது.
இதற்கு அருண் ஷோரி மறுப்பும், சிபிஐக்கு எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இது தொடர்பாக சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்து விட்டதாகவும், எனது பதவிக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் ஜஸ்வந்த் சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான் நிதியமைச்சராக இருந்த போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இது தொடர்பாக சிபிஐயிடம் இருந்தோ அல்லது மத்திய அரசிடம் இருந்தோ என்னிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக எந்தத் தகவலும் வரவில்லை.
சிபிஐ தனது கடமையை செய்கிறது. அதை நான் வரவேற்கிறேன். விசாரணையை சந்திக்க தயார். என்னிடம் எந்த வகையில் விசாரணை நடத்தினாலும் அதற்கு முழு ஒத்துழைப்புத் தருவேன் என்றார் ஜஸ்வந்த் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications