அன்னா, ராம்தேவ் போராட்டங்களால் தேசியக் கொடிகளின் விற்பனை அதிகரிப்பு

அன்னாவாலும், ராம்தேவாலும் அரசுக்குத் தலைவலி என்ற போதிலும், அரசின் கஜானாவுக்கு நல்ல நேரமாகத்தான் இருந்துள்ளது. இவர்களின் தொடர் போராட்டங்களின்போது தேசியக் கொடிகள் பெருமளவில் விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனை காரணமாக டெல்லியில் உள்ள அரசின் காதி நிறுவனங்கள் பெரும் லாபத்தை சம்பாதித்துள்ளனவாம்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காதி நிறுவனங்களில் தேசியக் கொடிகளின் விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளதாம். கிட்டத்தட்ட 35 சதவீத உயர்வையும் இவை கண்டுள்ளன.
இதுகுறித்து காதி கிராம தொழில் கழக இயக்குநர் எஸ்.பி.சிங் கூறுகையில், கன்னாட் பிளேஸில் உள்ள நிறுவனத்தில்தான் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 10.5 கோடி அளவுக்கு கொடிகள் விற்றுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த விற்பனையை விட 35 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு விற்பனை ரூ. 7.79 கோடியாக இருந்தது என்றார் அவர்.
அன்னா ஹஸாரே, ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களின்போது தேசியக் கொடிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. சின்ன சைஸ் முதல் பெரிய சைஸ் வரையிலான கொடிகள் பல இடங்களில் போராட்டங்களின்போது பயன்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம். அதேபோல சுதந்திர தினத்தையொட்டியும் மக்கள் தேசியக் கொடிகளை பெருமளவில் பயன்படுத்தினர்.
காதி கிராமத் தொழில் கழகம் 6 விதமான வடிவில் கொடிகளை விற்பனை செய்கிறதாம். பெரிய சைஸ் கொடிகளின் விலை ரூ. 15,820 ஆகும். குறைந்தபட்ச விலை ரூ. 575 ஆகும்.
இந்த தேசியக் கொடிகளில் பயன்படுத்தப்படும் கதர்த் துணி கர்நாடக மாநிலம் தார்வாடில் தயாரிக்கப்படுகிறது. அச்சிடும் பணி மும்பையில் நடைபெறுகிறதாம்.
இந்திய தரக் கட்டுப்பாட்டுக் கழகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே கொடிகள் டெல்லி நிறுவனத்திற்கு விற்பனைக்கு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications