அரசின் அரிய கல்வித் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும்- ஜெயலலிதா

செப்டம்பர் 5ம் தேதியான நாளை ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசிரியராகப் பணிபுரிந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடிவருகிறோம்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
என்பது வள்ளுவன் வாக்கு. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்புக்கு மட்டுமல்லாமல் அவரது ஏழு பிறப்பிலும் உதவிடும் என்று வள்ளுவர் போற்றிப் புகழும் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.
நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்தது.
ஆசிரியர் தினமான இந்நாளில் ஆசிரியப் பெருமக்கள் ஆற்றுகின்ற இந்த அரிய பணியைப் பாராட்டி சிறந்த ஆசிரியப் பெருமக்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை அரசு வழங்குகிறது. இக்கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.
தமிழக அரசின் அரிய பல கல்வித் திட்டங்களுக்கு ஆசிரியப் பெருமக்கள் துணை நின்று, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் பணி மேலும் மேலும் சிறந்திட ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
தமிழகத்தில் பிறந்து ஆசிரியராக பணியை தொடங்கி இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியராக திகழ்ந்த இவரது பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவரது பிறந்தநாளில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்டுவரும் நல்லாசிரியர் விருதை பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தத்துவ மேதை இராதாகிருஷ்ணன் பல்கலைக்கழகம் வரை தாய்மொழியில்தான் கல்வி வழங்கப்பட வேண்டும், இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர். அவரது இந்த இரண்டு விருப்பங்களையும் செயல்படுத்துவதற்காக ஆசிரியர்கள் குரல் கொடுக்க வேண்டும். அரசு செயல்படுத்த வேண்டும்.
இதற்கான சூளுரையை ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தின நாளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications