ரூ. 10 கோடி மதிப்பிலான மில்லை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அபகரித்து விட்டதாக மூதாட்டி புகார்

ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் கே.கே.நகரில் குடியிருக்கும் நடராஜன் செட்டியார் மனைவி தனலட்சுமி (76) . இவர், சேலம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது கணவர் நடராஜன் செட்டியாருக்கு சொந்தமான ஜே.கே.கே.நடராஜன் நூற்பாலை, சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்கா வீராச்சிபாளையம் கிராமத்தில் உள்ளது.
6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நூற்பாலையின் மதிப்பு ரூ. 10 கோடி. இந்த மில்லை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் மெயின்ரோட்டில் வசிக்கும் செந்தாமரை அவரது கணவர் கிருஷ்ணராஜ் மற்றும் முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஈரோடு வழக்கறிஞர் பழனிச்சாமி, திமுகவைச்சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலியான ஆவணம் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டனர்.
அங்குள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களையும் கழற்றி விற்று விட்டனர். இதுதொடர்பாக நான் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நான் கொடுத்த புகாரில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாணிக்கம் ஆகியோரின் பெயர்களை நீக்கி விட்டு புதுப் புகார் தருமாறு கூறி வாங்கிக் கொண்டனர். மேலும் ரசீதும் கொடுத்தனர். அதன் பின்னர் மீண்டும் வரக் கூடாது என்று மிரட்டி அனுப்பினர்.
எனது மில்லை மீட்டுத் தர வேண்டும் என்று அப்பெண்மணி கூறியுள்ளார். தனது மில்லை முன்னாள் அமைச்சர் அபகரித்து விட்டதாக வயதான பெண்மணி கூறியுள்ளா புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்ட நில அபகரிப்புப் பிரிவு போலீஸார் தற்போது மனு மீது விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு விருதுநகர் மாவட்டத்தில் நிறைய மில்கள், தியேட்டர் சொந்தமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications