சாத்தூர் அருகே கோவில்பட்டி வீரலட்சுமியின் தந்தை, சகோதரி கொலை
கோவில்பட்டி: சாத்தூர் அருகே கோவில்பட்டி வீரலட்சுமியின் தந்தை, சகோதரியை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி குடிசைக்குள் போட்டு எரித்துக் கொன்றனர்.
தூத்துக்குடி மாவடடம குறுமலை அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவருக்கு பெரியதாய், வீரலட்சுமி, சின்னதாய், ஜெயப்பிரதா ஆகிய 4 மகள்கள். வெள்ளைச்சாமி என்ற மகன் உள்ளார்.
சின்னத்தாயும், வெள்ளைச்சாமியும் பாறைப்பட்டியிலேயே வசிக்கின்றனர். ராமசந்திரனின் 2வது மகள் வீரலட்சுமி கோவில்பட்டியில் வசித்து வந்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பே கணவராலேயே கொலை செய்யப்பட்டார். இவரது கதை பின்னர் சிம்ரன் நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது.
வீரலட்சுமியின் மகள் அழகு ராஜேஸ்வரி. ராமசந்திரனின் பராமரிப்பில் சாத்தூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
அமீர்பாளையத்தைச் சேர்ந்த மோகனுக்கு மற்றொரு மகளான பெரியதாயை ராமசந்திரன் திருமணம் செய்து கொடுத்தார். இவர்களை வைத்தே ராமசந்திரன் அவரது கடைசி மகள் ஜெயப்பிரதா இருவரும் அமீர்பாளையம் வந்து குடியேறினர். இப்பகுதியில் பன்றி, மாடுகளை வளர்த்து வந்தனர். இவற்றுக்கு தேவையான தீவணங்களை வைப்பதற்கு ஒரு குடிசை போட்டிருந்தார்.
தந்தை வேலைக்கு சென்று விடும் நாட்களில் இரவில் தங்குவதற்கு ஜெயப்பிரதா அவரது அக்கா வீட்டுக்கு சென்று விடுவார். வாரத்தில் ஒரு நாள் ராமசந்திரன் வீட்டுக்கு வருவார். அந்த நாளில் தந்தையும், மகளும் வீ்ட்டுக்குள்ளேயே தங்கிக் கொள்வர். நேற்று முன்தினம் ராமசந்திரன் அமீர்பாளையம் வந்திருந்தார். இவரும், ஜெயப்பிரதாவும் வழக்கம் போல் குடிசையில் தங்கியிருந்தனர். நேற்று காலை இவர்கள் தங்கியிருந்த குடிசை எரிந்து சாம்பலாகி கிடந்தது. தந்தை, மகளின் உடல்கள் எரிந்த நிலையில் கிடந்தன. உடலில் வெட்டுக் காயங்களும் இருந்தன.
குடிசைக்கு வெளியே ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. இது குறித்து சாத்தூர் டிஎஸ்பி சின்னையா, இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை இருந்ததால் சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியவில்லை. குடிசைக்கு வெளியே ரத்தம் சிந்தியுள்ளதால் தந்தையும், மகளும் வெளியே வெட்டிக் கொலை செய்யப்பட்டு பின்னர் உடல்களை குடிசைக்குள் போட்டு தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications