''அண்ணா சிலை இருக்கக் கூடாது என நினைக்கும் அண்ணா திமுக'': கருணாநிதி

அவர் அளித்த பேட்டி விவரம்:
கேள்வி: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்களே?
பதில்: நீதிபதிகள் அதை மட்டும் கூறவில்லை. ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி இருக்கிறார். அவரை பார்த்து நீதிபதிகள், ஜெயலலிதா இந்த வழக்கிலே எத்தனை முறை வாய்தா வாங்குவார்?, நீங்கள் அந்த அம்மையாருக்கு சொல்லக் கூடாதா? என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதா இப்படி எல்லாம் செய்வது நல்லதல்ல என்று கூறி, நேரடியாக சென்று விசாரணையை சந்திக்க சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி: தமிழக சட்டப்பேரவையில் திமுக மீண்டும் வெளிநடப்பு செய்திருக்கிறது. மாநகராட்சியின் இடம் அண்ணா அறிவாலயத்திலே உள்ளதை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அண்ணா அறிவாலயத்தில் உள்ள அந்த இடம் பற்றி ஏற்கனவே பிரச்சனை எழுப்பி ஆணைகள் எல்லாம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலே அண்ணா சிலை இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த சிலை அங்கே இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணா திமுக அல்லவா?. ஆகவே அண்ணா சிலை இருக்கக் கூடாது என்பதற்கான முயற்சியிலே ஈடுபட எண்ணுகிறார்கள்.
கேள்வி: தொடர்ந்து தி.மு.கவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள். சட்டப் பேரவையிலும் பேசுவதற்கான வாய்ப்பு தரப்படுவதில்லை. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் ஒரு வழக்கிலே கைது செய்யப்பட்டு இருக்கிறாரே...
பதில்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், உயர் நீதிமன்றத்தினால் ஜாமீனில் வெளியே அனுப்பப்பட்டவரை, திடீரென்று வேறோரு வழக்கில் கைது செய்கிறார்கள். அது எந்த வழக்கிலே என்றால், ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சாதகமாக உயர் நீதிமன்றத்திலே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கில் இன்றைக்கு அவரை மீண்டும் கைது செய்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டத்திற்கு எதிரான அக்கிரமங்கள், அராஜகங்கள் இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
போலீசாரும் சேர்ந்து கொண்டு செய்கிற காரியங்கள் இவை. இதற்கெல்லாம் எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும். நான் போலீசாரை மிரட்டவில்லை. ஆனால், அவர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்றார்.
பாளையங்கோட்டை சிறையில் கே.என்.நேருவின் தம்பி:
இந் நிலையில் கொச்சி விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், இன்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமஜெயம் இன்று காலை திருச்சியில் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிறையில் இடமில்லை என நிர்வாகம் கூறியதாகவும், இதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications