சட்டசபைக்குள் போட்டோ எடுத்த திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜாவின் செல்போன் பறிமுதல்
சென்னை: சட்டசபை நடவடிக்கைகளை தனது கேமரா செல்போன் மூலம் படம் பிடித்த திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி. ராஜாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உரிமை மீறல் குழு விசாரணை நடத்தும் என்றும் சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று திமுகவினர் மீதா நில அபகரிப்பு வழக்குகள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது அண்ணா அறிவாலயம் நிலம் குறித்து அதிமுக உறுப்பினர் பி.வெற்றிவேல் புகார்கள் கூறினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது எம்.எல்.ஏ. ராஜா தனது கையில் இருந்த செல்போன் மூலம் இந்த மோதலை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சபாநாயகரிடம் அதிமுக உறுப்பினர்கள் புகார் கூறினர். இதையடுத்து அவரது செல்போனைப் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டார் ஜெயக்குமார். அதன்படி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் சபாநாயகர் கூறுகையில், திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, பேரவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் விடியோ படம் எடுத்ததாகத் தெரிகிறது. இதில் உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால், இந்தப் பிரச்னையை பேரவை விதியின்படி உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன் என்றார்.
மன்னார்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனவர் பாலுவின் மகனான ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications