எதிர் கருத்தையும் சொல்வதுதான் சட்டமன்றம்; ஒரே கருத்தைச் சொல்வது எதேச்சதிகாரம்- துரைமுருகன்
சென்னை: சட்டசபையில் திமுகவினர் இருப்பதை ஆளும் கட்சியினர் விரும்பவில்லை என்று சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அதிமுக உறுப்பினர் குற்றம் சாட்டினார். இதற்கு திமுகவினர் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்தக் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து பணியாற்றக் கூடாது என்பதற்காக எங்களுக்கு அநீதி இழைக்கின்றனர். அனைவருக்கும் ஒரே பகுதியில் இடம் என்ற கோரிக்கையை ஏற்காவிட்டாலும், திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவுப்படி, ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்காக பேரவைக்கு மீண்டும் வந்தோம்.
ஆனால், திட்டமிட்டே திமுக மீதும், திமுக தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்துகிற வேலையை சட்டப்பேரவைத் தலைவரும், ஆளும் கட்சியினரும் நிறைவேற்றுகின்றனர்.
கவன ஈர்ப்புத் தீர்மானம் என்ற பெயரில் அதிமுக உறுப்பினர் ஒருவர், கோபாலபுர வீட்டிலும், அண்ணா அறிவாலயத்திலும் திமுக தலைவர் கருணாநிதி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். அதை மறுப்பதற்காக எழுந்தபோது, உறுப்பினர் பேசிய பிறகு வாய்ப்பளிப்பதாக பேரவைத் தலைவர் கூறினார். அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.
ஆனால், அந்த உறுப்பினர் திமுக மீது சராமரியாக குற்றம்சாட்டினார். திமுக போன்ற பெரிய கட்சியை வரம்பு மீறி ஒட்டுமொத்தமாகக் குறைகூறுவதை எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்?.
விளக்கம் சொல்ல எழுந்தால் பேரவைத் தலைவர் நோட்டீஸ் கொடுத்தீர்களா என்று கேட்கிறார். சட்டப்பேரவையில் கூறப்படும் ஒரு கருத்துக்கு விளக்கம் அளிக்க அனைத்து உறுப்பினருக்கும் உரிமை உள்ளது. ஆனால், எங்களுக்கு பதிலளிக்க வாய்ப்பளிக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீட்டுக்குப் பின்புறம் ஓடை இருந்ததாகக் கூறப்படும் பகுதியில், கருணாநிதியின் பாதுகாப்புக்காக வரும் போலீஸார் தங்கியிருக்கின்றனர். அதில் அவர் வீடு எதையும் கட்டவில்லை. அதேபோல், அண்ணா அறிவாலயத்தில் உள்ள காலி நிலம் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இதற்கு விளக்கம் அளிக்க அனுமதிக்கவில்லை.
சட்டப்பேரவையில் பங்கேற்க வேண்டும். மக்கள் பிரச்சனையைப் பேச வேண்டும் என்று வந்தோம்.ஆனால், நாங்கள் அவையில் இருப்பதே ஆளும்கட்சியினருக்கு பிடிக்கவில்லை. எதிர் கருத்தையும் சொல்வதுதான் சட்டமன்றம். ஒரே கருத்தைச் சொல்வது எதேச்சதிகாரம் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications