தீஸ்தா ஒப்பந்தம் கைவிடப்பட்டது: மத்திய அரசு இறங்கிவந்தும், இறங்காத மம்தா
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது வங்கதேச பயணத்தை ரத்து செய்ததையடுத்து தீஸ்தா நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இருப்பினும் மம்தா வங்கதேசப் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக இன்று வங்கதேசம் புறப்பட்டார். அவர் வங்கதேச அதிபர் ஜில்லுர் ரஹ்மான், பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசவிருக்கிறார். பிரதமருடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் செல்வதாக இருந்தது. ஆனால் தீஸ்தா நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த கடைசி நேரத்தில் வங்க தேசப் பயணத்தை மம்தா ரத்து செய்தார்.
இந்தியா- வங்கதேசம் இடையிலான தீஸ்தா நதி நீர் விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சமீபத்தில் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது தீஸ்தா நதியில் வங்கதேசத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மேனன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முடிவு மேற்கு வங்க மாநிலத்துக்கு பாதகமானது என்பதால், இந்தத் திட்டத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரதமருடனான தனது வங்கதேசப் பயணத்தை மம்தா திடீரென ரத்து செய்துவிட்டார்.
பிரதமரின் வங்க தேச பயணத்தின் போது தீஸ்தா நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாவதாக இருந்தது. ஆனால் மம்தா தனது எதிர்ப்பை காட்டியவுடன் அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இருப்பினும் மம்தா வங்க தேசம் செல்லவில்லை.
இது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மதாய் கூறியதாவது,
நதி நீர் விவகாரம் உணர்ச்சிகரமான விஷயம். அனைத்து தரப்புக்கும் ஏற்ற வகையில் தீஸ்தா ஒப்பந்தத்தை முடிக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மாநில அரசைக் கேட்காமல் மத்திய அரசு எதுவும் செய்யாது என்றார்.
வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மம்தா ஆர்வமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தனது ஆர்வத்தை அடக்கிக் கொண்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இந்த தீஸ்தா நதி நீரால் கூச் பெஹார், ஜல்பாய்குரி, வடக்கு மற்றும் தெற்கு தினாஜ்பூர் ஆகிய பகுதிகள் பயனடைகின்றன. நடந்து முடிந்த வேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த இடங்களில் திரிணாமூல் காங்கிரஸுக்கு அவ்வளவாக வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான் அப்பகுதி மக்களின் ஆதரவைப் பெற மம்தா முயற்சிக்கிறார் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications