திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்
கடலூர்: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த பாமக தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து அதிலிருந்து வெளியேறிவிட்டது. இப்போது பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை.
இந் நிலையில் திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கவுள்ளது.
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரியம் பிச்சை, திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தினார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. ஆனால் சட்டசபை உறுப்பினர்கள் பதவியேற்புக்காக திருச்சியிலிருந்து சென்னைக்குக் காரில் கிளம்பிய மரியம் பிச்சை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து இந்தத் தொகுதி காலியானது. இங்கு வருகிற அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடாது என கடலூரில் நிருபர்களிடம் ராமதாஸ் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. புதுவை இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதே வேளையில் விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
ஆளுநருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு:
இந் நிலையில் பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி இன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சி, பண விரயத்துக்கே வழிசெய்யும், அதை கைவிடவேண்டும். திருச்சி மேற்கு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, கட்சியின் செயற்குழு கூடி போட்டியிடுவது குறித்து முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications