தமிழகம் முழுவதும் ராஜீவ் காந்தி சிலைகளுக்குப் பலத்த பாதுகாப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் வரலாறு காணாத வகையில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டசபையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதை எதிர்த்து காங்கிரஸார் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களது போராட்டம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்ற போதிலும், மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்ற இவர்களது கோரிக்கையால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடலாம் என அரசு அஞ்சுகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தி சிலைகள் சேதப்படுத்தப்படலாம் என அரசு கருதுகிறது.
சமீபத்தில் சென்னையில் 3 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் சேதப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் சிலை உள்ளிட்ட சிலைகளுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications