கோவை..சேலம்..திருச்சி.. அலைகழிப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம்-மாஜிஸ்திரேட்டிடம் கண்கலங்கினார்
சேலம்: புதிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கோவையிலிருந்து சேலம் கொண்டு வந்து நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு திருச்சி சிறையில் அடைத்தனர்.
நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீன் அளிக்கப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவரை மீண்டும் போலீஸார் கைது செய்து சேலம் கொண்டு சென்றனர்.
வீரபாண்டி ஆறுமுகம் மீது ஏற்கனவே சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, சேலம் 5 ரோடு பிரிமியர் மில் நில அபரிப்பு வழக்கு, சேலம் தாசநாய்க்கன்பட்டி நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் மீது 4வதாக இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள கோவை ஜூவல்லரி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்ததாக இந்த புதிய வழக்கு போடப்பட்டு, அந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் நகைக்கடை அதிபர் பிரேம்நாத் கொடுத்த புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் நேற்று பகலில் மீண்டும் கைது செய்தனர்.
ஆனால், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இரவு 8 மணி அளவில் சேலம் அய்யந்திருமாளிகை ஜட்ஜ் பங்களா பகுதியில் உள்ள 4வது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி, ஸ்ரீவித்யா வீட்டிற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.
அப்போது மாஜிஸ்திரேட்டிடம் வீரபாண்டி ஆறுமுகம் தன்னை போலீசார் அலைக்கழித்ததாக கூறி கண்கலங்கினார். மதியம் 1 மணியில் இருந்து என்னை போலீசார் அலைக்கழிக்கிறார்கள். சாப்பிடுகிறீர்களா? சாப்பிடுகிறீர்களா? என மாற்றி கேட்டு ஒவ்வொரு ஹோட்டலாக நிறுத்தி நிறுத்தி என்னை அழைத்து வந்தனர். எனக்கு உடல்நிலை சரியில்லை. கோவை சிறையில் போதிய மருத்துவ வசதி இல்லை. இதனால் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிடவேண்டும் என்று அவர் கண்கலங்கியபடி கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா உத்தரவிட்டார். பின்னர் வெளியே வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை அவரது மனைவி லீலாவதி, மகன் பிரபு, மருமகள்கள் பிருந்தா செழியன், சாந்தி, பேத்திகள் உள்பட பலர் சந்தித்தனர்.
இதைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் சேலம் சிறை அதிகாரிகள் இங்கு போதிய இட வசதியில்லை என்று கூறி அவரை திருச்சி சிறையில் அடைக்குமாறு கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வீரபாண்டி ஆறுமுகம் திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டார். வழியில் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications