ஓணம் பண்டிகை: நெல்லையில் காய்கறி, பூ விலை விர்
ஆலங்குளம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் அனுப்பப்படுவதால் நெல்லை மாவட்டத்தில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆலங்குளம் தையல் நாயகி மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தி்ன் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் தினமும் இரவில் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளும இங்கிருந்து தான் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம் வரை ஓரிரு காய்கறிகளின் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்தது. ஆனால் பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் மாற்றமின்றி இருந்தது.
அதிக உற்பத்தி மற்றும் வெளி வரத்தால் தக்காளியின் விலை மட்டும் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் வரும் 9-ம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.10 வரை விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ. 25 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. உருளை ரூ.12-ல் இருந்து ரூ.20-வரையும், வெண்டைக்காய், சீனிஅவரக்காய் ரூ.4-ல் இருந்து ரூ. 20 வரையும் விற்கப்படுகிறது.
கடந்த வாரம் கிலோ ரூ. 5-க்கு விற்ற புடலங்காய் ரூ.15 ஆகவும், ரூ.15-க்கு விற்ற பீன்ஸ் ரூ.30 ஆகவும், கேரட் ரூ.20-ல் இருந்து ரூ.30 வரையும், முருங்கைக்காய் ரூ.10 -ல் இருந்து ரூ.30 வரையும், மாங்காய் ரூ.15-ல் இருநது ரூ.40 வரையும், முட்டைக்கோஸ் ரூ.8-ல் இருந்து ரூ.16 வரையும் ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக காய்கறி விலை ஏற்றம் கண்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் சங்கரன்கோவில், ஆலங்குளம், பாவூர்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications