ஆரல்வாய்மொழி அருகே நடத்தையில் சந்தேகித்து மனைவியைக் கொன்றவர் கைது
ஆரல்வாய்மொழி: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமராபுரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். அப்பகுதியில் உள்ள காற்றாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 2 ஆண், 1 பெண் குழந்தை உள்ளது. விஜயலட்சுமி ஆரல்வாய்மொழியில் உள்ள பிரிண்டிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் விஜயலட்சுமியின் நடத்தையில் கனகராஜ் சந்தேகப்பட்டார். தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது எங்கே சென்றுவிட்டு வருகிறாய் என்று கேட்டு விஜயலட்சுமியை கனகராஜ் தொந்தரவு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்தது. கடந்த 1-ம் தேதி அவர்களுக்குள் சண்டை முற்றவே அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் பிரித்து வைத்தனர். இதையடுத்து விஜயலட்சுமி அதே தெருவில் வசித்து வரும் அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
கனகராஜ் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்றிரவு கனகராஜ் குடித்து விட்டு விஜயலட்சுமியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த விஜயலட்சுமியை வெளியே தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் விஜயலட்சுமி வர மறுத்தார். இதனால் கனகராஜ் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து விஜயலட்சுமியின் பெற்றோர் மருமகன் தானே கூப்பிடுகிறார் என்று எண்ணி கனகராஜுடன் மகளை அனுப்பி வைத்தனர்.
பின்னர் விஜயலட்சுமியிடம் ஆசை வார்த்தை பேசிய கனகராஜ் அவரை அங்குள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கனகராஜ் விஜயலட்சுமியின் கழுத்தை நெறித்தார். இதை பார்த்த விஜயலட்சுமியின் பெற்றோர் ஓடி வந்து கனகராஜை தடுத்தனர். ஆனால் அவர் விடாப்பிடியாக விஜயலட்சுமியின் கழுத்தை நெறித்தார். சுமார் 10 நிமிடம் வரை கழுத்தை நெறித்ததால் விஜயலட்சுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விஜயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications