அமெரிக்காவில் 3 தீவிரவாதிகள் ஊடுறுவல்-கார் குண்டு தாக்குதலுக்கு அல் கொய்தா திட்டம்!

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், அல் கொய்தா அமைப்பு கார் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நியூயார்க், வாஷிங்டன் போன்ற நகரங்களில் செப்டம்பர் 11ம் தேதியன்று சுரங்கப் பாதைகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை கார் குண்டுகள் மூலம் தகர்க்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலத்தில் வந்த மிக முக்கியமான துப்பு இது. எனவே இதுகுறித்து எப்பிஐ அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
அதேசமயம், இந்த உளவுத் தகவல் நம்பகமானது, முக்கியமானது என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
3 தீவிரவாதிகள் ஊடுறுவல்
இதற்கிடையே, அமெரிக்காவுக்குள் 3 மர்ம மனிதர்கள் ஊடுறுவியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து எப்பிஐ உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் மூலம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுவதால் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சதித் திட்ட தகவலைத் தொடர்ந்து நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் நகர காவல்துறை ஆணையர் ரேமண்ட் கெல்லியுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மேலும் இந்த உளவுத் தகவல் குறித்து அதிபர் பராக் ஒபாமாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பகமான தகவல் என்று ஒபாமாவிடம் தெரிவிக்கப்பட்டதால் அவர் உரிய தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அல் கொய்தா தாக்குதல் சதித் திட்டம் மற்றும் 3 தீவிரவாதிகளின் ஊடுறுவல் தகவலால் அமெரிக்கா முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications