ஏஐ.. அவன் தான்டா பெரிய வேலையைப் பாத்துட்டு போயிட்டான்! வேலை காலி.. வீட்டுக்கு போன 1.28 லட்சம் பேர்!
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், பல்வேறு பணிகளை தானியங்கிமயமாக்கவும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இதனால், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் குறையும் சூழலும் உருவாகியுள்ளது. இதுவரை ஏ.ஐ.-ஆல் வேலையிழந்த நாடுகளின் பட்டியலில் உலகளவில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
வேலை இழப்புகளை கண்காணிக்கும் Layoffs.fyi வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் மட்டும் 1.28 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இது 2025-ம் ஆண்டு முழுவதும் பதிவான 1.24 லட்சம் வேலை இழப்புகளை விட அதிகமாகும். நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளை வேகமாக செயல்படுத்தி வருவதால், மனித வளத்தின் தேவையை பல இடங்களில் குறைத்து வருகின்றன.
செயற்கை நுண்ணறிவு
குறிப்பாக, ஒரே மாதிரியான பணிகளை மீண்டும் மீண்டும் செய்யும் பிரிவுகளில் பணியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களும் இதன் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 80 ஆயிரம் பேர் வேலை இழந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் அது 15 ஆயிரமாக குறைந்தது. ஆனால் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளரத் தொடங்கிய பிறகு 2022ஆம் ஆண்டில் வேலை இழப்பு 1.65 லட்சமாக உயர்ந்தது.
வேலை இழப்பு
2023ஆம் ஆண்டில் அது 2.65 லட்சத்தை எட்டி உச்சத்தை தொட்டது. பின்னர் 2024ஆம் ஆண்டில் 1.52 லட்சமாகவும், 2025ஆம் ஆண்டில் 1.24 லட்சமாகவும் குறைந்திருந்தாலும், 2026ஆம் ஆண்டில் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே மீண்டும் 1.28 லட்சம் பேர் வேலை இழந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அமெரிக்கா வேலை இழப்பில் முதலிடத்தில் உள்ளது. மொத்த பணிநீக்கங்களில் 71.3 சதவீதம் அமெரிக்க நிறுவனங்களிலேயே நடைபெற்றுள்ளது. இந்தியா 7.2 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜெர்மனி 3.4 சதவீதமும், இங்கிலாந்து 2.6 சதவீதமும் பதிவாகியுள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பம்
இந்தியாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் பல்வேறு துறைகளில் இருந்தாலும், கல்வித் துறையே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஏ.ஐ. காரணமாக ஏற்பட்ட வேலை இழப்புகளில் கல்வித் துறையின் பங்கு 21.7 சதவீதமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக நிதித் துறையில் 14.7 சதவீதம், உணவுத் துறையில் 12.3 சதவீதம், போக்குவரத்துத் துறையில் 11 சதவீதம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறையிலும் 11 சதவீதம் வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.
பணிநீக்கம்
குறிப்பாக ஆன்லைன் கல்வி நிறுவனங்கள், பாடத் திட்டங்கள் உருவாக்குதல், உள்ளடக்கத் தயாரிப்பு, தேர்வு மதிப்பீடு போன்ற பணிகளில் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளதால், அந்தத் துறையில் மனித வளத்தின் தேவை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், தரவு உள்ளீடு (Data Entry), வாடிக்கையாளர் சேவை (Customer Support), அடிப்படை மென்பொருள் சோதனை (Software Testing), உள்ளடக்க உருவாக்கம் (Content Creation), ஆவண பரிசீலனை (Document Review), கணக்கியல் உதவிப் பணிகள் உள்ளிட்ட ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்ட வேலைகள் எதிர்காலத்தில் அதிக ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தொழில்நுட்பம்
இருப்பினும், ஏ.ஐ. வளர்ச்சி வேலைவாய்ப்புகளை மட்டுமே பறிப்பதில்லை என்பதையும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏ.ஐ. சார்ந்த மென்பொருள் உருவாக்கம், தரவு அறிவியல் (Data Science), சைபர் பாதுகாப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங், ஏ.ஐ. மாதிரி பயிற்சி மற்றும் நிர்வாகம் போன்ற புதிய துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. எனவே, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதும், ஏ.ஐ. உடன் இணைந்து செயல்படும் திறனை வளர்த்துக்கொள்வதும் எதிர்கால வேலைவாய்ப்புகளை பாதுகாக்க உதவும் என்று டெக் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.














Click it and Unblock the Notifications