அடிமை.. உனக்கு என்ன தகுதி இருக்கு.. எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்? ஃபிஃபா உலகக்கோப்பையில் ஷாக்
நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நேற்று போர்ச்சுகல் அணி வெளியேறிய நிலையில்.. இன்னொரு பக்கம் வேறு ஒரு விவகாரம் சர்ச்சையாகி வருகிறது.
மைதானத்திற்கு உள்ளே மட்டுமன்றி, மைதானத்திற்கு வெளியேயும் பெரும் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பிரான்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிலியன் எம்பாப்பே மற்றும் பராகுவே நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் செலாஸ்டி அமரில்லா ஆகிய இருவருக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பையின் பரபரப்பான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பராகுவே அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் எம்பாப்பே மீது நிறவெறி காட்டப்பட்டதாகவும், அவருக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இப்போட்டியில் ஏற்பட்ட மோதல்களின் தொடர்ச்சியாக, பராகுவே செனட்டர் அமரில்லா தனது எக்ஸ் பக்கத்தில் எம்பாப்பேவை கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதில் எம்பாப்பேவை காலனித்துவ காலத்து நபர்.. அதாவது அடிமை போன்ற நபர் என்று விமர்சனம் செய்தார். அதோடு பிரெஞ்சுக்காரர் போல நடிக்க முயலும் திமிர்பிடித்த, அசிங்கமான, புதுப்பணக்காரர்.. என்றும் மிக மோசமாக சாடியிருந்தார். அதாவது இவரெல்லாம் அடிமையாகி இருந்த வம்சத்தை சேர்ந்தவர் இப்போது புதுப்பணக்காரராகிவிட்டார் என்பது போல குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு எம்பாப்பே தரப்பில் இருந்து.. அமரில்லா அரசியலுக்கே தகுதியற்ற, மோசமான பெண் என்று பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது அமரில்லா எம்பாப்பேவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதி, மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் மீது எனக்கு கோபமில்லை, உன் மீதுதான் கோபம்
அமரில்லா தனது புதிய எக்ஸ் பதிவில், தனக்கு பிரான்ஸ் நாடு மீதோ அல்லது அதன் தேசிய கால்பந்து அணி மீதோ எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பிரச்சனை உனக்கும் எனக்கும்தான். நான் இரண்டு வயது முதல் பதினேழு வயது வரை பிரெஞ்சு பள்ளியில்தான் படித்தேன்.
பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தை பாடி, அதன் கொடியை மதித்து வளர்ந்தவள் நான். எனக்கு பிரெஞ்சு மொழி பேசத் தெரியும், பிரான்ஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த கிறிஸ்துமஸைக் கூட நான் அங்குதான் கொண்டாடினேன். எனவே, என் கோபம் பிரான்ஸ் மீது அல்ல, உன் மீதுதான் எம்பாப்பே என்று கடுமையாக சாடி உள்ளார்.
மைதானத்தில் எம்பாப்பே காட்டிய திமிரும் அலட்சியமுமே தன்னை இந்த அளவுக்கு கோபப்படுத்தியதாக அமரில்லா குற்றம் சாட்டியுள்ளார். போட்டிக்கு முன்பாக எம்பாப்பே பேசிய கருத்துகளும், போட்டியின் போது பராகுவே வீரர்களை அவர் கீழ்த்தரமாக நடத்திய விதமும் அநாகரிகமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் வீரர்களை நீ மோசமாக பார்த்தாய், கெட்ட வார்த்தைகளெல்லாம் பேசினாய்.. உனக்கு நான் ஏன் மரியாதை தர வேண்டும் என்று அந்த பெண் எம்பி குறிப்பிட்டு உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, போட்டி முடிந்த பிறகு பராகுவே அணியின் கோல்கீப்பர் உனக்கு கைகொடுக்க வந்தபோது, அவரது உடல்நிலையைக் கூட பொருட்படுத்தாமல் கைகொடுக்க மறுத்து அவமதித்தாய். நீ உனது அநாகரிகமான நடத்தையை ஒரே விநாடியில் காட்டிவிட்டாய். இது என் ஒட்டுமொத்த நாட்டையும் காயப்படுத்தியுள்ளது, என்று அமரில்லா தனது போஸ்டில் கொதித்துள்ளார்.
எம்பாப்பேவுக்கு இறுதி எச்சரிக்கை!
முன்னதாக தான் போட்ட இனவெறி கலந்த பதிவை அமரில்லா நீக்கியுள்ளார். அதுகுறித்து விளக்கிய அவர், என் நரம்புகளில் ஓடும் ரத்தம் பூர்வகுடி. நான் எப்போதும் இனப்பாகுபாடு காட்டியதே இல்லை. பராகுவே வீரர்களை நீ அவமதித்ததைக் கண்டு கொதித்தது. அதனால் தான் உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பதிவை எழுதினேன். அதில் இருப்பது இனவெறி இல்லை... நீ உன் பதிவுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடுப்பேன்.. என்று அந்த பெண் எம்பி விளக்கி உள்ளார்.














Click it and Unblock the Notifications