மாடியிலிருந்து தள்ளியும் பிழைத்த வளைகுடா ரிட்டன் கணவன்.. டாய்லெட் கிளீனரால் கதையை முடித்த மனைவி
ஹைதராபாத்: வளைகுடா நாட்டிலிருந்து திரும்பிய கணவனை மாடியிலிருந்து தள்ளியிருக்கிறார் மனைவி.. அப்படியும் கணவர் உயிர் பிழைத்தார், பின்னர் ஊசி மூலம் டாய்லெட் கிளீனர் செலுத்தி அவரை கொலை செய்துள்ளார் மனைவி.. இந்த விவகாரத்தில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் நிஜமாபாத்தை உலுக்கிய இந்த சம்பவத்தின் புதிய அப்டேட்களை இந்த பதிவில் பார்ப்போம்.
வளைகுடா நாட்டிலிருந்து திரும்பிய கணவன், ஆரம்பத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட ஒரு சம்பவம், தற்போது அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய கொடூரக் கொலை என்பது அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு மயக்க மருந்து மற்றும் விஷம் கொடுத்து, பின்னர் அவரது மரணத்தை ஒரு விபத்து போலக் காட்ட முயன்ற அதிர்ச்சியூட்டும் சதியை நிஜாமாபாத் போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

வளைகுடா நாட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்துவிட்டு, கடந்த ஜூன் 27 அன்று சொந்த ஊர் திரும்பிய கணவரைக் கொலை செய்துவிட்டு, அது ஒரு விபத்து என நாடகமாட முயன்றதற்காக அவரது மனைவி உட்பட மூன்று பேரை நிஜாமாபாத் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டவரின் நரம்பில் பொருத்தப்பட்டிருந்த 'கானுலா' (குளுக்கோஸ் ஏற்றும் ஊசிக்குழாய்) வழியாக மயக்க மருந்து மற்றும் பாத்ரூம் கழுவும் திரவத்தை செலுத்தி இக்கொடூரத்தைச் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைகள் சனிக்கிழமை நடந்த போதிலும், இந்த வழக்கு திங்கட்கிழமைதான் பொதுவெளியில் தெரியவந்தது. உயிரிழந்த இளைஞர் பெயர் பிரசாந்த். ஜூன் 30 அன்று கொல்லப்பட்டிருக்கிறார். பிரசாந்தின் மனைவி சந்தியா , தனது உறவினர் அனில் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார். இதனால் தனது கணவர் பிரசாந்த் அந்த உறவிற்குத் தன் கணவன் தடையாக இருப்பதாகக் கருதி இக்கொலையைச் செய்ததாகப் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிஜாமாபாத் தெற்கு ரூரல் வட்டார இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் இதுகுறித்துக் கூறுகையில், ஜூன் 30 அன்று பிரசாந்த் இறந்த பிறகு, அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்குச் சந்தியா தகவல் கொடுத்துள்ளார். ஆனால், பிரசாந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது தாய் ஷாமலா போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையின் போது, சந்தியாவும் அனிலும் சேர்ந்துதான் இந்தச் சதியைத் தீட்டியுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் போலீசாருக்குக் கிடைத்தன.
போலீசார் தரப்பில் கூறுகையில், பிரசாந்த் வெளிநாட்டிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய உடனேயே, அவரைக் கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்ற அனில் தனது நண்பரான வெங்கட சாய் என்பவரின் உதவியை நாடியுள்ளார். பிரசாந்துடன் ஏற்கனவே பழக்கமிருந்த வெங்கட சாய், அவரை மது அருந்த வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு அவர்கள் மது அருந்திய பிறகு, பிரசாந்தை ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, முதலாவது மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். ஆனால், அந்தப் பயங்கர வீழ்ச்சியிலிருந்தும் பிரசாந்த் உயிர் பிழைத்துவிட்டார். இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, அடுத்த நாளே டிஸ்சார்ஜும் செய்யப்பட்டுள்ளார்.
"அன்றைய இரவே, நடந்த சம்பவத்தை பிரசாந்த் பெரிய பிரச்சனையாக்கிவிடுவாரோ என்ற பயத்தில், சந்தியாவும் அனிலும் அவரை எப்படியாவது கொன்றுவிட முடிவு செய்தனர். சந்தியா ஒரு செவிலியர் என்பதால், அவருக்கு மருத்துவ நடைமுறைகள் தெரிந்திருந்தன. மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும்போது பிரசாந்தின் கையில் 'கானுலா' குழாய் அப்படியே பொருத்தப்பட்டிருந்தது. அந்த நரம்புக் குழாய் வழியாகவே சந்தியாவும் அனிலும் சேர்ந்து மயக்க மருந்தையும், பாத்ரூம் கழுவும் திரவத்தையும் பிரசாந்தின் உடலுக்குள் செலுத்தியுள்ளனர்" என்று இன்ஸ்பெக்டர் சுரேஷ் தெரிவித்தார்.
அதன் பிறகு, அந்த திரவங்கள் உடலில் ஏறியதும், பிரசாந்தைக் கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவர் இயற்கையாகவே கீழே விழுந்து இறந்தது போலக் காட்ட அவர்கள் நாடகமாடியுள்ளனர் என்று நிஜமாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications