6 பள்ளி மாணவர்களை கடத்த முயன்ற கார் டிரைவர்: கூக்குரலிட்ட கிராமத்தினர்
சுரண்டை: ஊத்துமலை அருகே பள்ளிக்கு சென்ற 6 மாணவ-மாணவியரை மர்ம ஆசாமி காரில் கடத்தினார். அதனைப் பார்த்த ஊர் மக்கள் கூச்சலிட்டதால் அந்த 6 பேரையும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பித்து சென்றுவிட்டார்.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஊத்துமலை அருகே பலபத்திராமபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கங்கணகிணறு கிராமம். இந்த கிராமத்தில் ஒரு நடுநிலை பள்ளி உள்ளது. இது ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது. இன்று காலை 8.30 மணி அளவில் இந்த கிராம மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு வெள்ளைநிற டாடா சுமோ கார் வந்தது. காரை நிறுத்திய டிரைவர் நடந்து வந்த மாணவ, மாணவியரில் 6 பேரை சுமோவில் தூக்கி போட்டுக் கொண்டு பறந்தார். இதை கண்ட ஊர்மக்கள் கூக்குரலிட்டனர். இதையடுத்து காரை நிறுத்திய டிரைவர் கதவை திறந்து மாணவ, மாணவியரை கீழே தள்ளிவிட்டு இடத்தை காலி செய்தார்.
காரிலிருந்து கீழே விழுந்த முத்துராஜ், அவரது தம்பி ராதா, பாலா, ஆறுமுகத்தாய், பவித்ராதேவி, இளையமுத்து ஆகியோர் அழுது கொண்டே அங்கு நின்றனர். இது குறித்து ஊர்மக்கள் ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த காரை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த கார் அப்பகுதியில் உள்ள காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிய வந்தது.
இதையடுத்து காற்றாலையின் மேலாளர் வடமலையை பிடித்த விசாரித்து வருகின்றனர். காரில் கடத்தப்பட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில் பச்சை, வெள்ளை சீருடை அணிந்த சில மாணவ, மாணவிகள் ஏற்கனவே காருக்குள் இருந்தனர் எனறனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications