கே.என்.நேருவின் சொந்தக்காரர்கள் ஊருக்கெல்லாம் பஸ் விட்டதால் ரூ. 32 லட்சம் இழப்பு- அமைச்சர்
சென்னை: திமுக ஆட்சியின்போது கே.என்.நேருவின் உறவினர்கள், உதவியாளர்கள் வசித்த பகுதிக்கெல்லாம் பஸ் விட்டுள்ளனர். இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 32 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சட்டசபையில் நடந்த போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டு அவர் பேசியதாவது:
அரசு பஸ் கட்டணத்தைவிட, தனியார் பஸ் கட்டணம் அதிகமாக வாங்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் 52 ஆயிரம் கண்டக்டர்கள், டிரைவர்கள் ஆட்சியாளர்களை கவனித்ததால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பப்பணியாளர்கள் கவனிக்காததால் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாத நிலையில், பஸ்கள் பழுதுபார்க்கப்படாமல் இயக்கப்பட்டு உள்ளது. நிதியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டதால் அதிக விபத்துகள் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல தி.மு.க. ஆட்சியில் 12 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்களை ரிசர்வ் என்ற அடிப்படையில் பணிக்கு அமர்த்தினார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பணிகள் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அவர்களுக்கு போதிய வருவாய் இன்றி தங்கள் வாழ்க்கையை பறிகொடுத்துள்ளனர்.
இப்போது அவர்களுக்கு இருக்கும் பஸ்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணிகள் வழங்கப்படுகிறது. டாடா மேஜிக் போன்ற ஷேர் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தைவிட்டு, வேறு வழித்தடத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறுக்காக திண்டுக்கல் நகரத்தில் மட்டும் 1609 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 140 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்த நகரில் டாடா மேஜிக் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அந்த நாளில் மட்டும் அரசு பஸ்கள் மூலம் கூடுதலாக ரூ.2 லட்சம் வருவாய் கிடைத்தது. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்த 196 புதிய பேருந்துகள் 106 புதிய வழித்தடங்களில் இயக்கியவர் முதல்வர் ஜெயலலிதா. மேலும் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தாலும் ஆய்வு செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் பஸ்சில் இருக்கைகள் இருந்தாலும், சில மாணவர்கள் பஸ் தினம் என்ற பெயரில் பஸ் கூரைகளில் ஏறி பயணம் செய்கிறார்கள். அதிகாரிகள் இதுபோன்ற இடங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டு வருகிறது.
இது தவிர கிராமப் பகுதிகளில் உண்மையிலேயே கூரை மீது பயணம் செய்யும் அளவுக்கு நெரிசல் மிகுந்த வழித்தடங்கள் குறித்து தெரிவித்தால் அந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பஸ் டிரைவர்கள் மட்டுமின்றி எந்த வாகன டிரைவர்களும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த நேரு, தனது உறவினர்கள், உதவியாளர்கள் பகுதிகளுக்கு பஸ்களை பயணிகள் அளவை பார்க்காமல் இயக்கியதால் ரூ.32 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி 2007 ஜனவரி மாதம் புதிய பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பின்னர் 3 மாதத்தில் அந்த தடத்தில் அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு, அதே பஸ்கள் வேறு வழித்தடத்தில் மீண்டும் புதிய பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகும். இப்படி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
மக்களுக்கு நன்மை செய்யும் துறையாக இந்த துறை கடந்த ஆட்சியில் செயல்படவில்லை. அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் 2001-2006ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக செயல்பட்டன.
கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மாற்றாந்தாய் மனதோடு பார்த்துள்ளனர். அதனை மூடக்கூடிய அளவுக்கு செயல்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் இப்போது சீரமைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications