நடுரோட்டில் நல்லக்கண்ணுவுடன் ரவுடிகள் அராஜகமா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சென்னை அருகே செங்குன்றத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வாடகை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கார் லயோலா கல்லூரி அருகே வந்த போது 2 சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் அதை வழிமறித்துள்ளனர்.
அவர்கள் காரில் இருந்த நல்லக்கண்ணுவை வெளியே இழுத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் கார் சாவியை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் நல்லக்கண்ணுவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நல்லக்கண்ணு சென்ற வாடகை காரின் உரிமையாளர் மோகன் ஒரு தனியார் வங்கியில் கடன் வாங்கி காரை வாங்கிவிட்டு தவணை செலுத்தவில்லையாம். இதனால் கடுப்பான வங்கி குண்டர்களை அனுப்பி காரை பறிமுதல் செய்து வருமாறு கூறியுள்ளது. அவர்களும் காரில் யார் இருக்கிறார்கள் என்று கூடப் பார்க்காமல் கண்மூடித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் காரை நடுவழியிலேயே பறிமுதல் செய்துள்ளனர்.
இந் நிலையில் நல்லகண்ணு தாக்கப்பட்டுவிட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
என்னை யாரும் தாக்கவில்லை-நல்லகண்ணு மறுப்பு:
இதையடுத்து என்னை யாரும் தாக்கவில்லை என்று நல்லக்கண்ணு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் வாடகை காரில் பயணித்தேன். கார் உரிமையாளர் வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணையை செலுத்தவில்லை என்று கூறி இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் அந்த காரை மறித்தனர். என்னுடன் இருந்தவர்கள் இது குறித்து உடனடியாக போலீசுக்கு தெரிவித்ததால் அவர்கள் ஓடிவிட்டனர். தவணை கட்டவில்லை என்பதற்காக ஒரு பிரபல வங்கியினர் லேவாதேவி ஆட்களைப் போல நடந்து கொள்வது சரியில்லை என்றார்.












Click it and Unblock the Notifications