அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் செய்து தஞ்சமடைந்த ஜோடி: போலீஸ் சமரசம்
மத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் அலைபாயுதே பட ஸ்டைலில் கல்லூரி பேராசிரியை மணந்துள்ளார். இருவீட்டாரையும் போலீசார் சமரசம் செய்து வைத்து அனுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நரால் சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (27). சென்னை தாம்பரம் அருகே கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
பிரியதர்ஷினி சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இந்த காதல் ஜோடி எங்கே பெற்றோர்கள் பிரித்துவிடுவார்களோ என்று நினைத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே காதும், காதும் வைத்த மாதிரி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவரவர் வீட்டில் எதுவுமே நடக்காததது போன்று வாழ்ந்து வந்தனர்.
பிரியதர்ஷினிக்கு மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்தது. பெண் பார்க்க ஒரு மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர். இனியும் உண்மையை மறைக்க முடியாது என்று நினைத்த அவர் தனக்கு ஏற்கனவே பதிவுத் திருமணம் நடந்துவிட்டது என்றார். இதைக் கேட்ட மாப்பிள்ளை வீட்டாரும், அவரது பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இனியும் பெற்றோர் வீட்டில் இருந்தால் ஆபத்து என்று நினைத்த பிரியதர்ஷினி வீட்டை விட்டு வெளியேறி குமரேசனிடம் வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து மத்தூர் அருகே உள்ள குமரேசனின் வீட்டிற்கு சென்றனர்.
உடனே பிரியதர்ஷினியின் பெற்றோர் இது குறித்து மாத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் காதல் ஜோடியை அழைத்து பேசியபோது குமரேசனுடன் தான் செல்வேன் என்று பிரியதர்ஷினி பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து அவரை கணவன் குமரேசனுடன் அனுப்பி வைத்தனர். இருவீட்டாரையும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பெற்றோர்கள் தம்பதியரை ஏற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications