நளினியின் தூக்கை திமுக அரசு ரத்து செய்தது, 3 பேரின் தூக்கை அதிமுக அரசு ரத்து செய்யட்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: நளினியின் தூக்கு தண்டனையை திமுக அரசு ரத்து செய்தது போன்று, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனைய அதிமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

1989-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்து முதல்வராகப் பொறுப்பேற்ற நான், எனக்கும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே அரசியல் மாச்சர்யங்கள் இருந்தபோதிலும், முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு இந்தியப் பிரதமர் என்ற முறையில், ராஜீவ் காந்தியை சந்தித்து மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக; நான் 9-2-1989 அன்று டெல்லி சென்றிருந்தேன்.

இதைப் பற்றி இப்போதல்ல; நான் எழுதிய "நெஞ்சுக்கு நீதி'' புத்தகத்தில் நான்காம் பாகத்தில் எழுதியிருக்கிறேன். அது வருமாறு:- "அப்போது மனந்திறந்து பேசிய ராஜீவ், விரைவில் இலங்கைக்கு மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும், பிரபாகரனைச் சந்தித்து பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான வாய்ப்புகளையும் உருவாக்கிடத்தக்க வழிவகைகளை வகுத்துத் தருவதாகவும், சென்னைக்குச் சென்ற பிறகு மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் உறுதிபடக் கூறினார்.

அன்றைய தினம் டெல்லியில் மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கொடுத்த செய்தி வெளியீட்டில் "இலங்கையில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, மீண்டும் சந்தித்து, இலங்கைப் பிரச்சனை குறித்து விவாதித்து, வன்முறைக்கு முடிவு காணுகிற சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து நல்லிணக்கமும், முழு அமைதியும் ஏற்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி ஈழத்திற்காக நானும் பாடுபடுவேன் என்று சொன்ன ராஜீவ் காந்தி தமிழகம் வந்தபோது கொல்லப்பட்டு விட்டார் என்பதும் - அதைத் தொடர்ந்து நடந்த விரும்பத்தகாத கொடிய வன்முறைச் சம்பவங்களும் - எத்தனையோ முறை நானும் நமது தமிழகத் தலைவர்களும், ஏன் இந்தியத் தலைவர்களும் கூட வேண்டிக் கேட்டுக் கொண்டும் ஈழ விடுதலைப் போராளிகளுக்கிடையே நடந்து கொண்டிருந்த சகோதர யுத்தங்களுக்கு முடிவே ஏற்படாமல் - தமிழீழ விடுதலையில்,

ஈழத் தமிழர் பெற வேண்டிய உரிமைகளில் அக்கறை கொண்ட என் போன்றோர் சலித்துத்தான் போக நேரிட்டது. அந்த வேதனை ஒரு பக்கம் இன்னும் நம்மை வாட்டிக் கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கமோ ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமானவர் என்று தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டியவர்களென மூவரின் பெயர் பட்டியல் நம் முன்னால் தொங்க விடப்பட்டிருக்கிறது.

சாந்தன்,பேரறிவாளன், முருகன், நளினி என்றிருந்த நால்வரில், நளினிக்கு தூக்குத் தண்டனையை திமுக அரசு ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைச் செய்தது - இன்றைக்கும் நமக்கு மன ஆறுதலைத் தருகிறது. ஒரு பெண் என்பதால் - மற்றும் ஒரு குழந்தையின் தாய் என்பதால் - நளினிக்குக் கிடைத்துள்ள அந்தச்சலுகை விரிவுபடுத்தப்பட்டு - இருபதாண்டு காலத்திற்கு மேலாக ஏறத்தாழ ஆயுள் தண்டனை கைதிகளைப் போல சிறையிலே இருந்து வாடிய சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களை;

தொடர்ந்து கைதிகளாகவே இருந்திடச் செய்யாமல் அவர்களை விடுவித்திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், கருணை காட்டப்பட வேண்டும், அவர்கள் மீதான குற்றம் மிகப் பெரியது என்ற போதிலும், அவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை மனதிலே கொண்டு மனிதாபிமானத்தோடு இரக்கம் காட்ட முன் வர வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். இப்பொழுதும் அதையே கூறுகிறேன்.

இது போன்ற நிகழ்வுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிட ஒரு மாநில அரசு எந்த விதிமுறைப்படி அவர்களின் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமோ அவ்வாறு தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பில் இருந்தபோது மாற்றியமைத்து - அவர்களை வாழ விட்டிருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணங்களாக - தியாகு, கலியபெருமாள் போன்றவர்கள் திகழ்கிறார்கள்.

இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தியாகு - நல்ல எழுத்தாளராக, கட்டுரையாளராக, புத்தகங்கள் வெளியிடுபவராக இந்தச் சமுதாயத்தில் இப்போது மதிப்புடன் உலவுவதைப் பார்த்தாவது சாந்தனுக்கும், முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வாழ்வளித்து - அவர்கள் அறிவாற்றலை சமுதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இது என்னவோ! ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமானவர்களுக்கு அளிக்கும் பரிசு என்று யாரும் கருதாமல் - இதுதான் அவர்களுக்குரிய தண்டனை என்று நினைப்பதால் கேடு ஒன்றும் விளைந்திடாது. இன்றைய தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் - மனித நேயத்தோடு பிரச்சனையை உண்மையிலேயே அணுக வேண்டுமானால் - அதற்குரிய விதிமுறைப்படி ஏற்கனவே திமுக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைப்படி - உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி அதிலே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி - அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+