ராமநாதபுரம் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, மதுரை பஸ் ஸ்டாண்டில் குண்டு வீச்சு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சுற்றுலாப் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசி சிலர் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். இதேபோன்று மதுரை அனுப்பானடி பேருந்து நிலையத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பஸ் மூலம் சுற்றுலாவாக கிளம்பினர். கன்னியாகுமரி, திருச்செந்தூர் போய் விட்டு ராமேஸ்வரம் புறப்பட்டனர்.
இவர்கள் பயணித்த பஸ், நேற்று நள்ளிரவில் ராமநாதபுரம் அருகேஉள்ள பட்டணம் காத்தான் ராம்நகர் பகுதியில் வந்தபோது திடீரென 30க்கும் மேற்பட்டோர் பஸ்சை சூழ்ந்தனர். பின்னர் பெட்ரோல் குண்டை வீசித் தாக்கினர்.
மேலும் பஸ் கண்ணாடிகளையும் அந்தக் கும்பல் சரமாரியாக அடித்து நொறுக்கியது. இருப்பினும் பஸ் டிரைவர் சாதுரியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் பயணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கபப்ட்டது.
நேராக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது பஸ். அங்கு காயமடைந்த ஐவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிரொலியாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக கருதப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் 2 பேருந்துகள் மீது தாக்குதல்
இதேபோல தேனி மாவட்டத்தில் ஒரு ஆம்னி பஸ் மற்றும் அரசு பஸ் மீது சிலர் மண்ணெண்ணெய் பாட்டிலை வீசி தீவைத்துத் தாக்குதல் நடத்தினர்.
மதுரையிலும் பெட்ரோல் குண்டுவீச்சு
மதுரையில் உள்ள அனுப்பானடி பேருந்து நிலையத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளைத் தூக்கி வீசின. மதிய வேளை என்பதால் அங்கு பயணிகளோ, பேருந்துகளோ அவ்வளவாக இல்லை. இந்த சம்பவத்தைப் பார்த்த மக்கள் பீதியடைந்தனர்.
நெல்லையில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தூப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
2வது நாளாக நேற்றும் இரவு 8 மணிக்கு பின்னர் சங்கரன்கோவில் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதேபோல் நெல்லையில் இருந்து ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, களக்காடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்திலேயே வெகுநேரமாக காத்திருந்தனர். ஆனால் இந்த வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. நெல்லையில் இருந்து இயக்கப்படும் பாபநாசம், தென்காசி, தூத்துக்குடி பேருந்துகள் நேற்று இரவு 9.30 மணிக்கு நிறுத்தப்பட்டன.
அரசுப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் சிலர் வேன்களை வாடகைக்கு அமர்த்தி ஊருக்கு சென்றனர். இன்று காலை 7 மணிக்கு மேல்தான் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒரு சில பேருந்துகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications