குண்டுவெடிப்போ என பயந்து விட்டோம்- ரயில் விபத்து குறித்து சித்தேரி மக்கள் பேட்டி

சித்தேரி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த விபத்தில்10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் வாசிகள் கூறுகையில், குண்டுதான் வெடித்து விட்டதோ என முதலில் நினைத்ததாக கூறினர்.
இதுகுறித்து சிதம்பரம் என்பவர் கூறுகையில், மிகப் பெரிய சத்தம் கேட்டு ஓடி வந்தோம். ரயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்து வெடிகுண்டு வைத்து விட்டனரோ என்று முதலில் பயந்து போனோம். அந்த அளவுக்கு சத்தமும் பெரிதாக இருந்தது. பின்னர்தான் விபத்து என அறிந்தோம். இதையடுத்து ரயிலை நாங்கள் ரயிலை நோக்கி ஓடினோம். ஆனால் கடும் இருட்டாக இருந்ததாலும், புகைமூட்டமாக இருந்ததாலும் எங்களால் உடனடியாக யாரையும் மீட்க முடியாத நிலை இருந்தது என்றார்.
அம்பத்தூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இந்த விபத்தில் சிக்கி காயமடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், பலத்த சத்தம்தான் கேட்டது.அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது, புகையும் வந்தது. குண்டுவெடிப்பு நடந்து விட்டதோ என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் விபத்து என அறிந்தேன் என்றார்.
மாதவரத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் இந்த ரயிலில் தினசரி பயணிப்பவர். அவரும் விபத்தில் சிக்கிக் காயமடைந்தார். அவர் கூறுகையில், பலத்த சத்தம் கேட்டது. அதன் பின்னர் நான் தண்டவாளத்தில் கிடந்தேன். சக பயணிகள்தான் என்னைக் காப்பாற்றி மீட்டனர் என்றார்.
விபத்தில் இறந்தவர்கள் பட்டியல்
விபத்தில் உயிரிழந்த பத்து பேரின் அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம்:
ரகு, பரசுராமன், சேட்டு, கிரீஷ் குமார், கவிதா, ரகுநாத், சதீஷ் குமார், தலங்கை சிவலிங்கம், முனியப்பன், விநாயகம்.
10 பேரின் உடல்களும் அரக்கோணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதேப் பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.












Click it and Unblock the Notifications