அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் - 21 அழகிகள், 12 புரோக்கர்கள் கைது
சென்னை: சென்னையில் அழகு நிலையம் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் செய்து வந்த 12 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல மாநிலங்களைச் சேர்ந்த 21 அழகிகள் மீட்கப்பட்டனர்.
சென்னை நகரில் அழகு கலை நிலையங்களும், ஆயுர்வேத மசாஜ் நிலையங்களும் தெருவுக்குத் தெரு விதவிதமான பெயர்களில் செயல்பட்டு வருகின்றன.
வீட்டுக்கே வந்து விரும்பும் வகையில் மசாஜ் செய்கிறோம் என அழகிய பெண்களின் படத்தைப் போட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.
மசாஜ் கிளப் என்ற பெயரில் சில இடங்களில் விபச்சாரம் நடப்பதாக சென்னை போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இந்த மாதிரி புரோக்கர்களை பிடிக்கவும், அவர்களிடம் சிக்கித்தவிக்கும் இளம் பெண்களை மீட்கவும் கமிஷனர் ஜே.கே.திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், இணை கமிஷனர் பொன்.மாணிக்கவேல் ஆகியோரின் உத்தரவுப்படி போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸ் தனிப்படையினர் முதலில் ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த அழகு கலை மசாஜ் சம்பந்தமான விளம்பரங்களில் கொடுக்கப்பட்ட முகவரிகளை சேகரித்தனர். அதில் ஒரு விளம்பரத்தில், நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை அருகில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் மசாஜ் கிளப் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
வாடிக்கையாளர் போல...
இதைத்தொடர்ந்து அந்த மசாஜ் கிளப்பை கண்காணிக்க போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, அந்த தனியார் மசாஜ் கிளப்பில் வாடிக்கையாளர் போல் ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பினர். அந்த அதிகாரியை வாடிக்கையாளர் என்று கருதி கொண்ட மசாஜ் கிளப்பினர் அவரிடம், 'உங்களுக்கு அழகிகள் வேண்டுமா?' என்று கேட்டனர். அதற்கு அவர், 'நான் நாளை வருகிறேன்' என்று கூறி வெளியே வந்துவிட்டார்.
அந்த மசாஜ் கிளப்பில் விபசாரம் நடப்பதை உறுதி செய்துகொண்ட போலீசார், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் உள்ளே புகுந்தனர். இதை சற்றும் எதிர்பாராத மசாஜ் கிளப்பினர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து விபசார தடுப்பு போலீசார் கிளப்பில் இருந்த மணிப்பூர், ஆந்திரா, கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த 6 அழகிகளை மீட்டனர். அவர்களை வைத்து விபசாரம் செய்து வந்த அஜீஸ்குமார் தாஸ், அவரது நண்பர் ரேணுகா என்ற பிரியா ஆகியோரை கைது செய்தனர்.
21 அழகிகள், 12 புரோக்கர்கள்
இதைத்தொடர்ந்து ஆங்கில நாளிதழ்களில் வந்த மற்ற விளம்பரங்களை கொண்டு போலீசார் சோதனை மேற்கொண்டு வந்ததில் ஏராளமான மசாஜ் கிளப்புகள் விபசார மையங்களாக செயல்பட்டது தெரியவந்தது.
அதன் பேரில் தேனி மாவட்டத்தை சேர்ந்த குமார், மதுரையை சேர்ந்த கவுசிக், ஆந்திராவை சேர்ந்த லட்சுமணன், சூளைமேட்டை சேர்ந்த ஆனந்த், சைதாப்பேட்டையில் விபசாரம் செய்து வந்த கேரளாவை சேர்ந்த ரஜீஸ், ரஞ்சித்தேவ், ஆர்.ஏ. புரத்தை சேர்ந்த ஜெகன் மோகன் ராவ், வேளச்சேரியை சேர்ந்த மகாலட்சுமி, கே.கே.நகர் ராணி, வடிவேல், கொளத்தூர் பகுதியை சேர்ந்த அகிலன், வடபழனியை சேர்ந்த இக்பால் ஹாரீஸ் ஆகிய 12 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த மசாஜ் கிளப்பில் இருந்த மும்பை, கல்கத்தா, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 இளம் பெண்கள் மீட்கப்பட்டன. ஏற்கனவே அமைந்தகரையில் மீட்கப்பட்ட அழகிகளையும் சேர்த்து 21 அழகிகள் மீட்கப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி மைலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம் பாயும்
சென்னை நகரில் ஆயுர்வேத மசாஜ், அழகு நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடத்தி வரும் புரோக்கர்கள் பற்றி தெரியவந்தால் அது குறித்து விபசார தடுப்பு போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுக்கலாம். அழகு கலை என்ற பெயரில் விபசாரம் செய்வது தெரியவந்தால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications