மதுரை சிறையில் இருக்கும் கருப்பசாமிபாண்டியனை பாளை சிறைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: நில ஆக்கிரமிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருக்கும் நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தனது உறவினர் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த கொம்பையா தேவர் என்பவரது 3 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு மிரட்டி எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கொம்பையா தேவர் மனைவி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் கருப்பசாமி பாண்டியனையும், அவரது சகோதரர் சங்கரசுப்புவையும் கைது செய்து மதுரையில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கருப்பசாமி பாண்டியன் தன்னை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றக் கோரி நெல்லை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு இருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் விசாரணைக்காக மதுரையில் இருந்து நெல்லை நீதிமன்றத்திற்கு வந்து செல்ல இயலாது.
ஒவ்வொரு முறையும் சுமார் 300 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியது இருப்பதால் எனது உடல்நிலை மேலும் பாதிக்கும். எனவே, பாளையங்கோட்டை சிறைக்கு என்னை மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கருப்பசாமிபாண்டியனை ஒரு நாள் மட்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கருப்பசாமிபாண்டியன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ். பழனிவேலு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கருப்பசாமிபாண்டியனின் வழக்கறிஞர் ஆர். ஆனந்த் கூறியதாவது, குற்றவியல் நடைமுறை சட்டப்படி ஒரு வழக்கில் கைது செய்யப்படும் நபரை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்களோ அந்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சிறையில் அடைக்க உத்தரவிட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உண்டு என்றார்.
இதற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்ததால் வழக்கு விசாரணை வரும் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மேலும் கருப்பசாமிபாண்டியனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருப்பசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட திமுக சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரதம் திடீரென ரத்து செய்யப்பட்டது. தான் கைது செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவித்து யாரும் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று அவரே கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதம் ரத்து செய்யப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications