பெட்ரோல் விலை உயர்வுக்கு வைகோ கண்டணம்: விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதில் இருந்து இது வரை 11 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது.
தற்போது பெட்ரோல் விலையை மீண்டும் ரூ. 3.14 உயர்த்தி உள்ளது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிற சூழலில் பெட்ரோல் விலையை உயர்த்துவதால் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாவார்கள்.
கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற போது, பெட்ரோல் விலை ரூ. 37.84 ஆக இருந்தது. 7 ஆண்டு காலத்தில் பெட்ரோல் விலை சுமார் 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டும் மத்திய அரசு, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல் விலையைக் குறைக்க முன்வரவில்லை.
மேலும், கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலையைத் தங்கள் விருப்பப்படி உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
அரசின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுவிட்டதால் மக்கள் நலனைப்பற்றி கவலைப்படாமல், லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.
ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைவதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில் கடந்த பட்ஜெட்டில் மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 4. 37 கோடி வரிச்சலுகை அளித்ததை மத்திய அரசு மறுக்க முடியாது.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் பணவீக்கத்தையும், விலை வாசியையும் கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகிவிட்டது.
எனவே, மக்களை பாதிக்கும் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications