பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து கேரளாவில் பந்த்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, இடது சாரிகள் மற்றும் பா.ஜ.கா.வினரால் அறிவிக்கப்பட்ட பந்த் இன்று காலை 6 மணிக்கு துவங்கியது. இதனால் மாநில எங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் நாடு முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்தை கண்டித்து, கேரளாவில் இன்று பந்த் நடத்தப் போவதாக பா.ஜ.க. மற்றும் இடதுசாரிகள் அறிவித்தனர். இதன்படி இன்று காலை 6 மணிக்கு துவங்கியது பந்த். இது மாலை 6 மணி வரை தொடரும்.
பந்த்தின் முக்கிய கோரிக்கையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை திரும்ப பெறுதல், பெட்ரோல் விலையுயர்வு அதிகாரத்தை மத்திய அரசின் அதிகாரத்திற்கே மீண்டும் கொண்டு வருதல் போன்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
பந்த்தை ஒட்டி சில இடங்களில், மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கொச்சியில் பஸ்கள் மற்றும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். கோழிகோடு மாவட்டத்தில் மீன் ஏற்றி வந்த லாரி மீது கற்கள் வீசப்பட்டன.
திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் ஆரவாரமே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. குறிப்பிட்ட சில பகுதிகளில் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் பஸ்கள் இயங்கின.
இதனால் பல இடங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலையங்களில் சோகத்தோடு காத்து கிடந்தனர். திறக்கப்பட்ட சில கடைகளின் மீதும் கல்வீச்சுகள் நடந்தன. மாநிலத்தில் நடந்து வரும் பந்த்தை ஓட்டி மக்கள் வெளி நடமாட்டம் இல்லாமல் வீடுகளிலேயே முடுக்கி கிடந்தனர்.
தமிழத்திலும் பாதிப்பு:
கேரளாவில் அறிவிக்கப்பட்ட பந்த் காரணமாக தமிழக எல்லை பகுதியிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு வழக்கமாக காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகள் யாரும் இன்று வரவில்லை. கேரளாவில் நேற்றே பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும் இன்று குறைந்தளவிலேயே மார்க்கெட்டிற்கு வந்தனர்.
மேலும் கோவையில் இருந்து கேரளாவிற்கு கூலித்தொழிலாளர்களுக்கு பஸ்கள் குறைந்தளவில் இயக்கப்பட்டதால் சிரமம் ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளும் நேற்று நிறுத்தப்பட்டன.
தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்கள் களியக்காவிளை வரை சென்று திரும்பியது. கேரளா செல்ல வேண்டிய லாரிகள் களியக்காவிளையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications