நான் வீணாகத்தான் போட்டியிடுகிறேன்- தேர்தல் மன்னன் பத்மராஜன் 'பளிச்' பேட்டி!

திருச்சி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. அப்போது பத்மராஜன் என்ற சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். பத்மராஜனுக்கு தேர்தல் மன்னன் என்று பெயர். ஒரு தேர்தல் விடாமல் தொடர்ந்து போட்டியிட்டு டெபாசிட்டை பறி கொடுத்தபடி இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தலையும் கூட இவர் விடுவதில்லை. இன்று அவர் 123-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கே.பத்மராஜன் (52). அவர் கடந்த 1988-ம் ஆண்டு முதல் நாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.
அவர் பி. வி. நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எதியூரப்பா, தேவே கெளடா, ஏ. கே. அந்தோணி என பல முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட முறை சுயேச்சையாகப் போட்டியிட்டதற்காக இவர் கின்னஸ் சாதனையும் படைத்தவராவார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தேர்தலில் வெற்றி பெற மாட்டேன் என்று நன்றாகத் தெரிந்தும் ஏன் வீணாகப் வேட்புமனு தாக்கல் செய்கிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவோ உண்மை தான். கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். 1991-ம் ஆண்டு ஆந்திராவில் நரசிம்ம ராவுக்கு எதிராக போட்டியிட்டபோது என்னை கடத்திவிட்டனர்.
இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். கடந்த 2003-ம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றேன். கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்.சாதனைக்காகவே இப்படிப் போட்டியிட்டு வருகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications