கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம்: ஜெயலலிதாவுடன் பேச 16 பேர் கொண்ட குழு அமைப்பு!
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக நாளை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்காக 16 பேர் கொண்ட குழுவை கூடங்குளம் போராட்டக் குழு அமைத்துள்ளது.
கூடங்குளம் விவகாரம் தொடர்பாக நாளை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசவுள்ளது. இந்தக் குழுவில் மதுரை மறை மாவட்ட ஆயர் பீட்டர் பெர்னாண்டோ, தூத்துக்குடி, கோட்டார், பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர்கள், போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் உள்பட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் நாளை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் தங்களது கோரிக்கை மற்றும் நிலையை எடுத்துரைப்பர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றிலுமாக மூட வேண்டும், அணு உலையை மூட வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அமைச்சரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூடங்குளம் போராட்டக் குழு வற்புறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்காவி்ட்டால் தற்போது நெல்லை, குமரி மாவட்ட அளவில் உள்ள போராட்டத்தை நாடு தழுவிய மிகப் பெரிய போராட்டமாக மாற்றவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளையும் போராட்டக் குழு எடுத்து வருகிறது.
இதற்கிடையே கூடங்குளம் திட்டத்தை எதிர்த்து இடிந்தகரை கிராமத்தில் 10 நாட்களுக்கு முன் தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதற்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உண்ணாவிரத பந்தலில் 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதற்கிடையே அணு மின்நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இன்று பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் 2வது நாளாக அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வக்கீல்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications