வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி 2.66 லட்சம் பேர் விண்ணப்பம்: பிரவீன் குமார்
சென்னை: வாக்காளர் பட்டியிலில் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரி 2. 66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படும். இதன்படி ஜனவரி மாதம் 1-ம் தேதி அன்று 18 வயதை நிறைவு செய்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணிக்குப் பிறகும் ஏராளமான பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தமிழக சட்டசபை தேர்தலின்போது 4 கோடியே 70 லட்சத்து 49 ஆயிரத்து 529 வாக்காளர்கள் இருந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இருந்து ஏராளமான பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
நேற்று வரை 2 லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்துள்ள விவரங்களை வாக்குச்சாவடி அதிகாரிகள் அந்தந்த முகவரிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வார்கள். அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள். இதன் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications