எதியூரப்பாவின் மகன்கள்-மருமகன் வீடு, அலுவலகங்களில் லோக் ஆயுக்தா ரெய்ட்!

நிலமோசடி மற்றும் ஊழல் புகாரில் சிக்கியதால் பதவி விலகினார் எதியூரப்பா. எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன்குமார் ஆகியோர் மீது லோக் ஆயக்தா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று எதியூரப்பாவின் மருமகன் சோகன்குமாருக்கு சொந்தமான பெங்களுர் வீடு, அலுவலகங்களில் இன்று லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
எதியூரப்பாவின் குடும்பத்தினர் பெயரில் பிரேர்னா என்ற அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளாக எதியூரப்பாவின் மகன்கள், ராகவேந்திரா, விஜயேந்திரா ஆகியோர் உள்ளனர். இவர்களது அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது.
நில விவகாரம்: கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி பாட்டீல் ராஜினாமா:
இந் நிலையில் கர்நாடக லோக் ஆயுக்தாவின் நீதிபதியாக பதவியேற்று 2 மாதங்கள் கூட முடியாத நிலையில் சிவராஜ் பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். விதிமுறைகளை மீறி அவருக்கும், அவரது மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக லோக் ஆயுக்தாவின் நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டேவின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய நீதிபதியாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல்(71) கடந்த மாதம் 3-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
நில மோசடிகள் குறித்து விசாரிக்கும் சிவராஜ் பாட்டீல் மற்றும் அவரது மனைவி மீதே நில விவகாரம் குறித்த புகார் எழுந்தது. விதிமுறைகளை மீறி கடந்த 1994-ம் ஆண்டு நீதித்துறை ஊழியர்கள் லேஅவுட்டில் சிவராஜ் பாட்டீலுக்கு 9, 600 சதுர அடி நிலமும், வயலிக்காவல் வீட்டுவசதி கூட்டுறவு சங்கத்தில் இருந்து அவரது மனைவிக்கு 4, 200 சதுர அடி நிலமும் ஒதுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதையடுத்து அவர் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, இதுபோன்ற சூழலில் ராஜினாமா செய்வது தான் சரி. என் பெயரைக் கெடுக்கவே சிலர் இவ்வாறு பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இப்படி நேர்மையாக இருப்பவர்கள் மீது எல்லாம் குற்றம் சாட்டினால் ஊழலை எதிர்த்துப் போராட நேர்மையான யாரும் முன்வர மாட்டார்கள்.
என் மனைவிக்கு ஒதுக்கப்பட்ட பிளாட்டை திரும்பக் கொடுக்குமாறு தெரிவித்தேன். அவரும் அந்த பிளாட்டை கடந்த 14-ம் தேதி ஒப்படைத்துவிட்டார். ஆனால் அவர் ஒப்படைத்ததை நல்ல விதமாக எடுத்துக் கொள்ளாமல், ஏதோ குற்றம் செய்துவிட்டு அதை ஒப்புக்கொண்டது போன்று பெரிய பிரச்சனையாகியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications