பாழும் கிணற்றில் சாக்கில் கட்டிய நிலையில் 5 வயது சிறுமியின் உடல் மீட்பு
குடியாத்தம்: வேலூரில், 5 வயது சிறுமியை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி பாழும் கிணற்றில் எறிந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் காளியம்மன்பட்டி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜா (35). இவரது மனைவி அனிதா. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு ஹரிப்பிரியா (7), ராஜேஸ்வரி (5) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
வழக்கம் போல ஹரிப்பிரியாவும், ராஜேஸ்வரியும் பள்ளிக்கு சென்றனர். மாலையில் பள்ளி விடுவதற்கு சற்றுமுன்பாக ராஜேஸ்வரி இயற்கை உபாதைக்காக வெளியே சென்றதாக தெரிகிறது. அதன்பின் அவள் வகுப்பறைக்கு வரவே இல்லை.
மாணவி மாயமானது குறித்து ராஜேஸ்வரியின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு ஆசிரியர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திய போது, பள்ளியில் சற்று தொலைவில் உள்ள பாழும் கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கிடந்த ஒரு மூட்டையை கண்டுபிடித்தனர். அதை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் வெளியே எடுத்து பிரித்து பார்த்த போது, காணாமல் போன சிறுமியின் உடல் கிடைத்தது.
கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்களையும் சேகரித்து கொண்டனர். வகுப்பறையில் இருந்து தனியே வெளியே வந்த சிறுமியை மர்மநபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, கிணற்றில் ஏறிந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications