கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட எம்.பி. பதவியை உதறத் தயார்: திருமா

நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடலோர கிராம மக்கள் கடந்த 11 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். நேற்று இடிந்தகரை சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எம்.பி. போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. மத்திய அரசு உத்தரவாதம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம் அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது என்று விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் கூறுகின்றனர். ஆனால் அணு உலைக்கு 100 சதவீத பாதுகாப்பு இருக்கிறது என்று யாராலும் உறுதியளிக்க முடியாது. கதிர்வீச்சு ஏற்பட்டால் பேரிழப்பை சந்திக்க வேண்டும்.
ரூ. 13 ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு திட்டத்தை பாதியிலேயே நிறுத்த முடியாது என்கிறார்கள். சேது சமுத்திர திட்டத்திற்குக் கூடத்தான் பல கோடி ரூபாயை கொண்டுபோய் கடலில் கொட்டினார்கள். ஆனால் ராமர் பாலத்தைக் காரணம் காட்டி தடை ஆணை பெற்று திட்டப்பணிகளை நிறுத்தினார்கள்.
பண இழப்பு முக்கியம் இல்லை. நம் நாட்டில் எத்தனையோ பெரிய, பெரிய ஊழல்கள் எல்லாம் நடந்துள்ளன. இந்த ரூ. 13 ஆயிரம் கோடியை யாரோ ஊழல் செய்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
அணுமின் நிலையத்தை மூடினால் ரஷ்யாவுடனான உறவு பாதிக்குமே என்று அஞ்சாதீர்கள். இலங்கையுடனான உறவு பாதிக்கக் கூடாது என்று நினைத்து தான் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தீர்கள். அதுபோன்று அணு உலையால் தமிழக மக்கள் உயிரையும் பறித்துவிடாதீர்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடுங்கள். மாற்று சக்தி மூலம் மின்சாரம் பெற வழிவகை செய்யுங்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவதற்காக எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார். ஏற்கனவே மக்கள் பிரச்சனைக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்.
அணு உலைக்கு எதிரான ஒத்தக் கருத்துடைய எம்.பி.க்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலவைர், பிரதமரிடம் மனு கொடுப்பேன். இந்த அணுமின் நிலைய்ததை மூட வேண்டும் என்பது தான் எங்கள் கட்சிக் கொள்கையின் நிலைப்பாடு. 127 பேரின் மன உறுதியோடு, இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக நிற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications