உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி: பொன்.ராதாகிருஷ்ணன்

எல்லா கட்சிகளும் கூட்டணியா விவகாரங்களில் சிக்கியிருக்க அந்தக் கவலையே இல்லாத ஒரே கட்சி பாஜக தான். இந்தக் கட்சியை திராவிடக் கட்சிகள் ஒரு காலத்தில் கூட்டணியில் சேர்க்க போட்டி போட்டன. இப்போது யாரும் பாஜகவை கண்டு கொள்வதில்லை.
கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக முயன்றது. ஆனால், அதிமுக சேர்க்க மறுத்துவிட்டது. இதனால், வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அந்தக் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிடுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. வேட்பாளர்கள் குறித்த பட்டியலை மாவட்ட நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள். ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
சென்னை மேயர் பதவி..
இந் நிலையில் சென்னை மேயர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் வானதி சீனிவாசன், நரசிம்மன் என்பவர் உள்ளிட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
தமிழிசை ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியிலும், சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
தற்போது திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த மாவட்டங்களின் சில பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ளன. இந் நிலையில் பாஜக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு தமிழிசை நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
வானதி சீனிவாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications