கட்சிக் கரை வேட்டி தருமாறு நீதிபதியிடம் கோரிய கேசிபி-கோரிக்கை நிராகரிப்பு
குளித்தலை: குளித்தலை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜர்படுத்ப்பட்ட திமுக எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி, தான் கட்சிக் கரை போட்ட வேட்டி மட்டுமே கட்டுவதாகவும், ஆனால் அதை தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். அதேபோல தங்களது காவலில் அனுப்புமாறு போலீஸ் தரப்பில் வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
மணல் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட கேசிபி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை போலீஸார் குளித்தலை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் தனசேகரன் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது போலீஸ் தரப்பி்ல் 3 நாள் போலீஸ் காவல் கோரி மனு செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், மனு முறையாக இல்லை. போலீஸ் காவலில் அனுப்புவதற்கான உரிய காரணங்கள் அதில் கூறப்படவில்லை என்று கூறி மனுவை நிராகரித்து விட்டார்.
பின்னர் கேசிபி தரப்பில் வக்கீல் சார்பில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், எங்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. நான் கரை வேட்டி மட்டுமே கட்டுவேன். ஆனால் சிறையில் எனக்கு கரை வேட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் மாற்று வேட்டி இல்லாமல் ஒரே வேட்டியுடன் இருக்க நேரிட்டுள்ளது என்று கோரப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட், மருத்துவ வசதி, குடிநீர் வசதி குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மீண்டும் உரிய மனுவுடன் காவலில் எடுக்கக் கோரும் மனுவைத் தாக்கல் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications