திருச்சி மேற்கு- கே.என்.நேரு சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின்

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் பரஞ்சோதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். திமுக சார்பில் கே.என்.நேரு போட்டியிடுகிறார். ஆனால் அவரை அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து வெளியே வர முடியாத அளவுக்கு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நேருவை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவர் சார்பில் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து நேற்றிரவு திருச்சி வந்த ஸ்டாலின், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று நேருவின் சார்பில் தேர்தல் அதிகாரி சம்பத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
சீப்பை ஒளித்து வைத்துவிட்டால்...
முன்னதாக ஸ்டாலின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ செளவுந்தரபாண்டியன், கட்சி நிர்வாகிகள் குடமுருட்டி சேகர், மண்டி சேகர் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவாக்குறிச்சி எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமியை ஸ்டாலின் சநந்திக்க இருந்தார். ஆனால், பழனிச்சாமியை குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றுவிட்டதால் இந்த சந்திப்பு நடக்கவில்லை,
சிறையில் திமுகவினரை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்காக திமுக தலைவர் கருணாநிதி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கே.என்.நேருவை பிரசாரத்திற்கு வரவிடாமல் தடுப்பதற்காகவே அவர் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகள் போடப்படுகின்றன. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இடைத்தேர்தலில் ஒவ்வொரு திமுகவினரும் தன்னை வேட்பாளராக நினைத்துக் கொண்டு அயராது பணியாற்றி கே.என்.நேருவின் வெற்றிக்கு பாடுபடுவார்கள்.
உள்ளாட்சி, இடைத்தேர்தலில் அதிமுகவின் ஜனநாயக படுகொலைகள், திமுகவினர் மீது போடும் பொய் வழக்கு அராஜகம், சர்வாதிகார போக்கு ஆகியவற்றை விளக்கியும், முன்னிறுத்தியும் பிரசாரம் செய்வோம். திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளோம். அதையும் எடுத்துக் கூறி வாக்குச் சேகரிப்போம்.
சிறைச்சாலையில் திமுகவினரை கட்சி கரை வேட்டி கட்ட அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல் செயல். நான் சிறையில் பார்க்க வரும் நேரத்தில் கரை வேட்டி கட்ட அனுமதிக்கிறார்கள். சிறை நிர்வாகத்தின் மீது இந்த மனித உரிமை மீறல் குறித்து வழக்கு தொடருவோம் என்றார்.












Click it and Unblock the Notifications