செயலிழந்த அமெரிக்க செயற்கைக்கோளின் பாகங்கள் கனடாவில் விழுந்தன

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991-ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005-ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது.
அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும். இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிட்டாலும், சில பெரிய துண்டுகள் பூமியை அடைந்து விபத்துகளை ஏற்படுத்தலாம். அந்த பெரிய துண்டுகள் அதிகபட்சமாக 136 கிலோ வரை இருக்கலாம் என தெரிகிறது என்று நாசா வி்ஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த செயற்கைக் கோள் கனடாவில் வந்து விழுந்து கொண்டிருப்பதாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன. பல துண்டுகளாக உடைந்து பெரும் குப்பை போல இந்த செயற்கை கோளின் பாகங்கள் கனடாவில் விழுந்துள்ளன.
இதுதொடர்பாக ட்வீட்டர் மூலம் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. மேற்கு கனடாவில் உள்ள கல்காரியின் தெற்கில் உள்ள ஓகோடோக்ஸ் என்ற பகுதியில் இந்த செயற்கைக் கோள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு 1979ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்கைலேப் பூமியில் விழுந்தது நினைவிருக்கலாம்.
அதேபோல 2001ம் ஆண்டு ரஷ்யாவின் 135 டன் எடை கொண்ட மிர் விண்கலம், பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இதை ரஷ்ய வி்ஞ்ஞானிகள் தரைக் கட்டுப்பாட்டின் மூலம் இயக்கி கடலில் கொண்டு போய் விழ வைத்தனர். ஆனால் தற்போது விழுந்துள்ள அமெரிக்க செயற்கைக் கோள், எரிபொருள் தீர்ந்து போய் விட்ட காரணத்த்தால், கட்டுப்பாட்டை இழந்து அதுவாகவே விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications