சென்னை மேயர் பதவி- சைதை துரைசாமி், மேயர் மா.சுப்பிரமணியன் வேட்பு மனுத் தாகக்கல்
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பு மனுக்களை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியும், திமுக வேட்பாளரான மேயர் மா.சுப்பிரமணியனும் இன்று தாக்கல் செய்தனர்.
விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியின் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. 200 வார்டுகளுடன் சென்னை மாநகராட்சி விரிவடைந்துள்ள சென்னையைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது.
இந்த நிலையில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் சைதை துரைசாமி மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று மனுத் தாக்கல் செய்தனர்.
தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியனுடன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மனு தாக்கலுக்கு வந்திருந்தனர். சென்னை மாநகராட்சி ஆணையாளர் டி.கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார் மா.சுப்பிரமணியன்.
அதேபோல அமைச்சர் செந்தமிழன், பாலகங்கா உள்ளிட்டோருடன் சைதை துரைசாமி மனுதாக்கல் செய்ய வந்தார். அவரும் கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
சைதை துரைசாமியுடன் பெரும் திரளான அதிமுகவினரும் மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்திருந்தனர். அனைவரும் வெளியில் திரண்டு நின்றிருந்ததால் பெரும் பரபரப்பாக இருந்தது.
அதிமுக, திமுகவேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வந்ததால் ரிப்பன் கட்டடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications