முற்றும் மோதல்: மோடியிடம் உண்ணாவிரதக் கணக்கு கேட்கும் ஆளுநர்
டெல்லி: குஜராத் மாநில ஆளுநர் கமலா பெனிவாலுக்கும், முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. லோக் ஆயுக்தா பிரச்சனையே இன்னும் முடியாத நிலையில் மோடியின் உண்ணாவிரதத்தின் செலவுக் கணக்கை ஆளுநர் கேட்டிருக்கிறார்.
குஜராத் ஆளுநர் கமலா பெனிவால் முதல்வர் மோடியை கலந்தாலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தார். இதனால் மோடி ஆத்திரமடைந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் மோடியின் சத்பாவனா உண்ணாவிரத செலவுக் கணக்கை கேட்டுள்ளார் ஆளுநர் கமலா.
மோடியின் அமைச்சரவையில் இருந்த தற்போது அவருக்கு எதிரியாக மாறியுள்ள மகா குஜராத் ஜனதா கட்சியின் தலைவர் கார்தன் ஜதாபியா ஆளுநர் கமலாவை சந்தித்து மோடியின் உண்ணாவிரதம் பாஜக நடத்தியதா அல்லது மாநில அரசு நடத்தியதா என்று கேட்டுள்ளார்.
அப்படி அது மாநில அரசு நடத்தியிருந்தால் எந்தத் துறை செலவுகளை ஏற்றுக் கொண்டது என்றும், எவ்வளவு செலவு செய்துள்ளது என்றும் அவர் கேட்டுள்ளார்.
மோடி கடந்த 16-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு அரங்கில் உண்ணாவிரதம் இருந்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த அரங்கில் வேறு நிகழ்ச்சிகள் நடப்பதாக இருந்ததா? மோடிக்காக அவை ரத்து செய்யப்பட்டதா? என்றும் அவர் கேட்டுள்ளார்.
இது குறித்து ஜதாபியா நிருபர்களிடம் கூறியதாவது,
மோடி தன் சொந்த விளமபரத்திற்காக நடத்திய உண்ணாவிரதத்திற்காக மக்கள் பணம் ரூ. 55 கோடியை செலவளித்துள்ளார். இது குறித்து அரசிடம் செலவுக் கணக்கை கேட்குமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
உண்ணாவிரதத்திற்கு ஆன செலவை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் நாள் ஒன்றுக்கு ரூ. 6 கோடி செலவானதாக உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் கணித்துள்ளனர். ஆனால் 3 நாள் உண்ணாவிரதத்திற்கு ரூ. 55 கோடி செலவானதாக ஜதாபியாவும், காங்கிரஸும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆளுநர் மோடியிடம் உண்ணாவிரத செலவுக் கணக்கை சமர்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனால் மோடிக்கும், ஆளுநருக்கும் இடையே இருந்து வந்த பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. மோடி அரசு அனுப்பும் ஆவணங்களை அவ்வப்போது கையெழுத்துப் போடமலேயே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் கடுப்பான மோடி ஆளுநர் லோக் ஆயுக்தா நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆ. ஏ. மேத்தாவை தன்னிச்சையாக நியமித்தவுடன் மேலும் கடுப்பானார்.
இதையடுத்து இது குறித்து மோடி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வஸ்த்ராலில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி கமலா பெனிவாலைத் தாக்கிப் பேசினார்.
கமலா பெனிவாலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மோடி வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா நீதிபதி நியமிக்கப்படாமலேயே இருந்தார். இந்நிலையில் தான் ஆளுநர் தன்னிச்சையாக நீதிபதியை நியமித்தார். மோடி தன் அரசு செய்துள்ள குற்றங்களை யாரும் விசாரிக்க விரும்பாததால் தான் இவ்வாறு பிரச்சனையை கிளப்புகிறார் என்று மோடியின் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications