டெல்லியில் ஜும்மா மசூதி அருகே 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: 7 பேர் பலி, 25 பேர் காயம்
டெல்லி: டெல்லி ஜும்மா மசூதி அருகே 70 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர், 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.
டெல்லி சாந்தினி மகால் பகுதியில் ஜும்மா மசூதி அருகே 70 ஆண்டு பழமை வாய்ந்த 3 அடுக்குமாடி கட்டிடம் நேற்றிரவு 8 மணிக்கு திடீர் என்று இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர், 25 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நரேன் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த கட்டிடத்திற்கு அருகே சட்டவிரோதமாக நடந்து வந்த கட்டுமானப் பணியால் தான் 3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ. சோயப் இக்பால் கூறியதாவது,
இடிந்த கட்டிடத்திற்கு அருகே சட்டவிரோதமான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் தான் இந்த கட்டிடம் இடிந்தது. இந்த இடத்தில் சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது என்று நான் போலீசாரிடம் தொலைபேசி மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தேன். ஆனால் அதற்குள் இந்த சம்பவம் ந்டந்துவிட்டது என்றார்.
இடிந்து விழுந்த கட்டிடம் குறுகிய தெருவில் இருப்பதால் மீட்புப் பணிகளை துரிதமாகச் செய்ய முடியவில்லை. உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 70 ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் புதிதாக கதவு மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கட்டிடத்தை தாங்கும் தூண் இடிந்து விழுந்து தான் இந்த சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் கிழக்கு டெல்லியில் லக்ஷ்மி நகர் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 7 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications