தேமுதிக கூட்டணியில் இணைந்தது இந்திய கம்யூனிஸ்ட்!

இலவு காத்த கிளியாக மாறி, அதிமுக ஏதாவது தரும் என்று மகாப் பொறுமையுடன் காத்திருந்த சிபிஐ கடைசியில் கேட்டது கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனித்துப் போட்டியிடுவதாக முதலில் அறிவித்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன், தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து பேசுவோம் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தா.பாண்டியன் கூறுகையில்,
மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய, மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்கவும், அரசியல் கடமை கருதியும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து மக்கள் ஆதரவுடன் வெற்றியும் பெற்றோம்.
கடந்த 4 மாதங்களாக அ.தி.மு.க.வின் நடவடிக்கையில் அரசியல்ரீதியாக எங்களுக்கு எந்தவித முரண்பாடும் வரவில்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் இருந்த கூட்டணி தொடர அ.தி.மு.க.வுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். அது தோல்வியில் முடிந்தது. அப்போது கூட்டணிக் கட்சிகளும் விலகின. ஆனால் தேசிய அளவில் இடதுசாரிகள் கூட்டணியில் இருப்பதால் அதற்கு பங்கம் வரக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடர வேண்டும் என்று நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை.
இதனால் அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு எட்ட முடியவில்லை. அதனால் ஜனநாயக கடமையாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநிலக் குழு அனுமதி அளித்துள்ளது.
புது அணி அல்ல, உடன்பாடு மட்டுமே
அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு முயற்சி வெற்றி பெறவில்லையே தவிர, தற்போது உருவாகும் அணி புது அரசியல் அணியல்ல, இது தேர்தல் உடன்பாடு கூட்டணி மட்டுமே என்றார்.
மேலும் தனது கட்சி போட்டியிட விரும்பும் விருப்பப் பட்டியலையும் அவர் வெளியிட்டார். அதில், திருப்பூர், திருநெல்வேலி மாநகராட்சி மேயர், 18 நகராட்சி, 48 பேரூராட்சித் தலைவர் பதவிகள் அடங்கியிருந்தன.
இன்று காலை பேச்சு-மதியம் உடன்பாடு
இந்த நிலையில் இன்று காலை தேமுதிக அலுவலகத்திற்கு தா.பாண்டியன், பழனிச்சாமி, மகேந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு சென்று தேமுதிக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தை மதியத்தில் முடிவடைந்து இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து விஜயகாந்த் கூறுகையில், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
தனது கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகியவையும் இணையவுள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார் விஜயகாந்த். ஆனால், மனிதநேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications