அ.தி.மு.க. வக்கீல் வீட்டில் சோடாபாட்டில் வீசிய வழக்கில் துணை மேயர் மன்னன் சரண்
மதுரை: அ.தி.மு.க. அரசு வக்கீல் வீட்டில் சோடாபாட்டில் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மதுரை பகலவன் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க. வழக்கறிஞரான இவர், மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ளார். கடந்த மாதம் இவரது வீட்டில் மர்ம கும்பல் சோடா பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர். இது குறித்து தமிழ்ச்செல்வன் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மதுரை தி.மு.க.இளைஞரணி செயலாளர் ஜெயராமன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் ஜெயராமன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
துணை மேயர் மன்னன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மன்னனின் மனு விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் துணை மேயர் மன்னன், மதுரை 3 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி கதிரவன்(பொறுப்பு) முன் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.












Click it and Unblock the Notifications