சபரிமலை சீசன்: பாதுகாப்பு குறித்து அக்டோபர் 23ல் தென்மாநில அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்
திருவனந்தபுரம்: அடுத்த மண்டல சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 23-ம் தேதி கோட்டயத்தில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு சபரிமலை சீசனின்போது, ஜனவரி மாதம் 14ம் தேதியன்று மகரஜோதியைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஜோதி பார்த்து விட்டுத் திரும்பிய பக்தர்கள், புல்மேடு என்ற இடத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாத காரணத்தால், 102 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த அவல நிலைக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரள அரசும், சபரிமலை கோவில் நிர்வாகமும், வனத்துறையுமே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் நவம்பர் மாதம் 15-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் விழாவை நடத்த சபரிமலை தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
வழக்கமாக மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சமயங்களில் தான் சபரி்மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்துதான் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்களின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்தாலும் அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படுவதில்லை என நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலோசிப்பதற்காக தென் மாநில அறநிலையத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 23-ம் தேதி கோட்டயத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில அறநிலையத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications