பாகிஸ்தானியர் கொலை வழக்கில் விடுதலையான 17 இந்தியர்களுக்கு மீண்டும் சிறை
ஷார்ஜா: பாகிஸ்தான் நாட்டவரை கொலை செய்த வழக்கில் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட 17 இந்தியர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஷார்ஜாவில், கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம் 17 பேருக்கும் கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த 17 பேரும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்குவதாக சமரசம் பேசினர். இதற்கு சம்மதம் தெரிவித்த கொலை செய்யப்பட்டவரின் உறவினர் அதை நீதிமன்றத்தில் பெற்று கொண்டார். இதையடுத்து அந்த வழக்கு முடிக்கப்பட்டு, குற்றவாளிகளான 17 பேரும் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
நாடு திரும்பும் மகிழச்சியில் இருந்த 17 இந்தியர்களுக்கும் தற்போது அதிர்ச்சி அளித்துள்ளது ஷார்ஜா. அனைவரையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலை சம்பவம் நடந்த போது காயமடைந்த 2 பேர் இந்த 17 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனராம். அந்த வழக்கில் இவர்கள் கைதாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 17 இந்தியர்களும், அவர்களது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications