திருச்சி மாநகராட்சிக்கும் அக்டோபர் 17ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம்
சென்னை: திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூரை இணைத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சிக்கும் அக்டோபர் 17ம் தேதியே தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றே தொடங்குகிறது.
திருவெறும்பூரை திருச்சியுடன் இணைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று திருவெறும்பூரை இணைத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து திருச்சிக்கும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் அக்டோபர் 17ம் தேதியே திருச்சிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல் 17-10-2011, 19-10-2011 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது திருச்சிராப்பள்ளி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தலுக்கு அறிக்கை 30-9-2011 வெளியிடப்படும். வாக்குப்பதிவு தேர்தல் நாள் அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும்.
தேர்தல் அறிவிக்கை பிரசுரித்தல் மற்றும் வேட்புமனுக்கள் பெறும் நாள்: 30-9-2011.
வேட்பு மனுத்தாக்கல் இறுதி நாள்: 7-10-2011.
வேட்புமனுக்கள் ஆய்வு செய்யும் நாள்: 8-10-2011.
வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள்: 10-10-2011.
வாக்குப்பதிவு: 17-10-2011.
வாக்கு எண்ணிக்கை: 21-10-2011.
வார்டு உறுப்பினர்கள் முதல் கூட்டம் நடைபெறும் நாள்: 25-10-2011.
துணை மேயர் தேர்ந்தெடுக்க மறைமுக கூட்டம் நடைபெறும் நாள்: 29-10-2011.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மாநகராட்சிகளுக்கும் தேர்தல்
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
வாகன சோதனையில் சிக்கிய ரூ.10 லட்சம்:
இந் நிலையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.10 லட்சம் சிக்கியது.
வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 3 தேர்தல் பறக்கும் படை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று காலை கருமண்டபம் சோதனை சாவடியில் ஒரு காரை நிறுத்தி போலீசார் வாகன சோதனை நடத்தியபோது அதில் ரூ.4 லட்சம் இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 லட்சம் ரூபாய் வரை சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications