மின்சாரம் இல்லை, பஸ்கள் இல்லை... 22 வது நாளாக முடங்கிக் கிடக்கும் ஹைதராபாத்!

போக்குவரத்து பாதிப்பு, மின்சாரமின்மை, அத்தியாவசிய பொருள் சப்ளை பாதிப்பு போன்றவற்றால் நகரின் இயல்பு வாழ்க்கையே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தனித்தெலுங்கானா கேட்டு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் ஹைதராபாதில் 22-வது நாளாக முழு அடைப்பு நீடிக்கிறது. இது தவிர, தெலுங்கானா பகுதியில் அமைந்துள்ள 10 மாவட்டங்களிலும் இந்த ஸ்ட்ரைக் பரவியுள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மற்றும் ஹைதராபாத்துக்குள் நுழையும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் தெலுங்கானா பகுதியில் ஆங்காங்கே பஸ்கள் நடுவழியில் நிற்கின்றன. அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கிக் கிடக்கின்றன. நாளொன்றுக்கு ரூ 500 கொடுத்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட டிரைவர்களும் இப்போது நின்றுவிட்டனர்.
தனியார் பஸ்களையும் தடுத்து நிறுத்தி வருகின்றனர் போராட்டக்காரர்கள். நேற்று முன்தினம் விஜய வாடாவில் இருந்து 250 தனியார் பஸ்கள் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்தன. வாரங்கல் மாவட்டம் நஜ்ரேகல் என்ற இடத்தில் பஸ்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. திடீரென்று ஒரு கும்பல் கல்வீச்சில் ஈடுபட்டது. இதில் 20 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. தகவல் கிடைத்ததும் போலீசார் ஜீப்பில் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த ஜீப் மீதும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஜீப் நொறுங்கியது. அதில் வந்த இன்ஸ்பெக்டர் விஸ்வபிரசாத் பலத்த காயம் அடைந்தார். இதனால் தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன.
ஹைதராபாத் நகரமே முற்றாக முடங்கிப் போய் விட்டது. சரக்குப் போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால் எக்கச் சக்கவிலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன.
பஸ்கள் ஓடாததால் ரெயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம். ஆட்டோக்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது. ரூ.30 கட்டணத்தில் செல்லக் கூடிய இடத்துக்கு ரூ.120 ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இருளில் தவிக்கும் நகரம்
ஆந்திராவில் சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் தெலுங்கானாவுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் சுரங்கம் மூடப்பட்டது. நிலக்கரி சப்ளையாகாததால் ராமகுண்டம் அனல்மின் நிலையம் செயல்படவில்லை. அங்கிருந்து தென் மாநிலங்களுக்கு மின்சாரம் சப்ளையாகவில்லை.
இதனால் ஆந்திராவில் கடுமையான மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் 3 நாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 4 நாட்களுக்கு மட்டுமே மின்சாரம் சப்ளையாகிறது. இதன் காரணமாக தொழில்துறையும் முடங்கியுள்ளது.
ஹைதராபாத் நகரில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 4 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் 10 மணி நேரம் மின் வெட்டு அமலில் உள்ளது. கிராமங்களில் 10 மணி நேரமாக இருந்த மின்சார வெட்டு 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. அதாவது பாதிநாளுக்கும் மேல் இருளில் தவிக்கின்றனர் மக்கள்.
கிராமங்களில் பகல் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு இரவில் அதுவும் 5 மணி நேரம் மட்டும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் ஆந்திராவில் நிலைமை மிகவும் மோசமாகும். பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என்று வர்த்தக பிரமுகர்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஐடி நிறுவனங்களுக்கும் மின்சாரம் பெரும் பற்றாக்குறையாக உள்ளது. இவை ஜெனரேட்டர்கள் கொண்டு நிலைமையைச் சமாளித்து வருகின்றன.
ஆனால் இதே நிலை நீடித்தால் இந்த நிறுவனங்கள் காலவரையின்றி இழுத்து மூடிவிடும் அபாயம் உள்ளதாக ஐடி நிறுவன உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications