தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் பணிகள் என்ன? வைகோவை விஜய் டிக் அடிப்பாரா? அப்போ சிவிஎஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நியமிக்கப்படலாம் என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் கணக்குகளைத் தாண்டி, மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாகச் செயல்படும் இந்த 'டெல்லி சிறப்புப் பிரதிநிதி' பதவி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இதன் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.

vaiko mdmk

1. என்ன செய்கிறார் டெல்லி சிறப்புப் பிரதிநிதி?

ஒரு மாநில அரசுக்கும், டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கும் இடையே தினசரித் தொடர்புகளை சுமுகமாக எடுத்துச் செல்லும் மிக முக்கியமான 'அரசியல்-நிர்வாகப் பாலம்' தான் இந்த டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி.

மாநிலக் கோரிக்கைகளை முன்னெடுத்தல்: தமிழகத்தின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினைகள் (உதாரணமாக: நீட் தேர்வு விலக்கு, காவிரி நீர் விவகாரம், மீனவர் நலன்) குறித்து மத்திய அமைச்சர்களிடமும், பிரதமரிடமும் மாநில அரசின் சார்பில் நேரடியாக அழுத்தம் கொடுப்பது இவர்களின் முதன்மைப் பணியாகும்.

நிதி மற்றும் திட்டங்களைப் பெறுதல்: மாநிலத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மத்திய அரசின் மானியங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து ஒப்புதல் பெறச் செய்து, அதற்கான நிதியைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

அதிகாரப்பூர்வ அந்தஸ்து: இந்தப் பதவியில் அமர்த்தப்படுபவருக்குப் பொதுவாக 'கேபினெட் அமைச்சர்' (Cabinet Minister) அந்தஸ்து வழங்கப்படும். இதனால், டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் தங்கி, மத்திய அமைச்சகங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் இவருக்குக் கிடைக்கும்.

2. தவெக-வின் டெல்லி மாஸ்டர் பிளான்!

தற்போது அரசியல் வட்டாரத்தில் உலா வரும் தகவல்களின்படி, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விரைவில் வெளியேறப் போவதாகக் கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக, கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் பட்சத்தில், அது விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்துடன்' (தவெக) கூட்டணி அமைக்க வழிவகுக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

வைகோவுக்கு டெல்லி பதவி?

அப்படி ஒரு கூட்டணி அமையும் பட்சத்தில், தவெக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் வலுவாகக் கொண்டு சேர்க்கவும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கான நிதியைச் சாமர்த்தியமாகப் பெற்றுத் தரவும், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வைகோவை நியமிக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

டெல்லி அரசியலை பல தசாப்தங்களாக விரல் நுனியில் வைத்துள்ளவர், நாடாளுமன்றத்தில் மிகச்சிறந்த பேச்சாளர், தேசியத் தலைவர்கள் பலருடன் தனிப்பட்ட நட்பு கொண்டவர் என்ற அடிப்படையில் வைகோவின் அனுபவத்தைப் பயன்படுத்த விஜய் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

3. ரேஸில் இருந்த சி.வி.சண்முகம்?

முதலில் கசிந்த தகவல்களின்படி, தவெக கூட்டணியில் அதிமுகவின் அதிருப்தி அமி இணைந்தால், அதற்குப் பிரதிபலனாக அதிமுகவின் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் தர ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, டெல்லியில் சட்ட நுணுக்கங்களையும், அரசியல் வியூகங்களையும் கையாளத் தெரிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு இந்த டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி வழங்கப்படும் என்று பேசப்பட்டது.

ஆனால், தற்போது எஸ்.பி.வேலுமணி தரப்பு, மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடனேயே சேர்ந்துவிட்டது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், சிவி.சண்முகம் ஆகியோர் தனித்து செயல்பட்ட நிலையில் விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்தும் விலகிவிட்டார். சி.வி.சண்முகம் இதுவரை எடப்பாடி பழனிசாமியை போய் சந்திக்கவில்லை. மீண்டும் மீண்டும் பொதுக் குழுவை கூட்டுங்கள் என்றுதான் அவர் கோரிக்கை விடுத்து வருகிறார்.

தற்போதைய அரசியல் சூழலில் மதிமுகவின் நகர்வுகள் வேகமாக இருப்பதால், இந்த ரேஸில் வைகோவின் பெயர் பலமாக அடிபடத் தொடங்கியுள்ளது.

மத்தியில் உள்ள ஆளுங்கட்சியுடன் இணக்கமாகவோ அல்லது தர்க்கரீதியாகவோ பேசி மாநில உரிமைகளைப் பெறக்கூடிய ஒரு 'ஆளுமை' டெல்லியில் மாநில அரசின் முகமாக இருப்பது அவசியம். அந்த வகையில், தவெக இப்போதே டெல்லி பிரதிநிதி பதவிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும் வியூகத்தில் இறங்கியிருப்பது, அவர்களின் தீர்க்கமான அரசியல் திட்டமிடலையே காட்டுகிறது. வைகோ அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டால் தமிழகத்திற்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெறுவார் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+