எதற்காக திமுகவைத் தோற்கடிக்க ஆசைப்படுகிறார் ஜி.ராமகிருஷ்ணன்?- கருணாநிதி கேள்வி

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை படுதோல்வி அடையச் செய்யுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து "என் விருப்பத்தை வெளியிடுகிறேன்' என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், "இந்தத் தேர்தலில் திமுகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டியது நமது கடமை' என்று தேவையில்லாமல் திமுக மீது சீறிப் பாய்ந்திருக்கிறார். திமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் கொள்கை ரீதியாக மாறுப்பட்ட இயக்கங்கள் இல்லை.
பெரியாரையும், அண்ணாவையும் என் வாழ்வில் சந்திக்காமல் இருந்தால் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தான் இருந்திருப்பேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வீடு வழங்கும் திட்டம், மே தினத்துக்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை, சென்னையில் மே தின பூங்கா, மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதித் திட்டம், பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், விவசாயிகளிடம் விளைபொருள்கள் நேரடிக் கொள்முதல், பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம் அமைப்புசாரா தொழிலாளர் அனைவருக்கும் பல்வேறு நல வாரியங்கள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம், சமச்சீர் கல்வி என மார்க்சிஸ்ட்டுக்கு உடன்பாடான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அப்படியிருக்கையில், எதற்காக திமுகவைப் படுதோல்வி அடைய செய்ய வேண்டுமென்று ஜி.ராமகிருஷ்ணன் ஆசைப்படுகிறார்?
ஆனால், இதை மார்க்சிஸ்ட் கட்சியின் மற்ற தோழர்கள் ஏற்கமாட்டார்கள் என்பது உறுதி.
அவ்வப்போது நடைபெறும் தேர்தல்களில் உறவுகள், உடன்பாடுகள் வராமல் போகலாம். ஒரு தேர்தலில் தனித்தனி அணியில் இருக்கலாம். மற்றொரு தேர்தலில் ஒரே அணியில் இருக்கலாம்.
திமுகவும், மார்க்சிஸ்ட்டும் அடிப்படையில் எதிரெதிர் முகாமில் இருக்க வேண்டிய கட்சிகள் அல்ல என்பதையும், தேர்தலில் ஓரிரு இடங்களில் பெறும் வெற்றி பெரிதல்ல என்பதையும் மனதில் கொண்டு ராமகிருஷ்ணன் இனிமேல் கருத்துகளைத் தெரிவிப்பது நல்லது என்பதே என் விருப்பம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications